தேசிய மின்னிலக்கச் சேவைகளில் கடந்த ஆண்டு தடைகள் ஏற்பட்டபோது அவை பொதுவாக ஏறத்தாழ நான்கு மணி நேரம் நீடித்ததாக தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சேவைத் தடை ஏற்பட்டபோது 01 விழுக்காட்டுக்கும் குறைவான பயனீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட மின்னிலக்கச் சேவையைப் பயன்
படுத்திக்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
மின்னிலக்கப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அரசாங்க மின்னிலக்கச் சேவைகள் தங்கு
தடையின்றி சேவை வழங்குவதை உறுதி செய்யவும் சேவைகளின் மீள்திறனைப் பற்றியும் ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் ஹுவாங் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார்.
அரசாங்கத்தின் முக்கிய மின்னிலக்கச் சேவைகளில் தடை ஏற்பட்டு அவை நீண்டநேரத்துக்குத் தொடர்ந்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மாற்று வழிகள் குறித்து திரு ஹுவாங் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த டாக்டர் ஜனில், கடந்த ஆண்டு அரசாங்க மின்னிலக்கச் சேவைகளில் தடை ஏற்பட்டபோது அவை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீடித்ததாகக் கூறினார்.
"அரசாங்க மின்னிலக்க சேவைகளின் பெரும்பாலான கட்டமைப்புகள் 'வர்த்தக கிளவுட் ஹோஸ்ட்டிங்' பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். பொதுவாகப் பயன்படுத்தப்படும் தளங்களுடன் ஒப்பிடும்போது இந்த 'வர்த்தக கிளவுட் ஹோஸ்ட்டிங்' தனி ஒரு கட்டமைப்பை நம்பி இருப்பதில்லை.
செயலிகளும் இணையத்
தளங்களும் மெய்நிகர் மற்றும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கிளவுட் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. இதன் விளைவாக மேலும் பலரால் இவற்றைப் பயன்படுத்த முடிகிறது. அதே சமயம் கூடுதல் நீக்குப்போக்குத் தன்மை உறுதி செய்யப்படுகிறது," என்றார் டாக்டர் ஜனில்.
சேவைத் தடை ஏற்பட்டால் அதற்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்று வழிக்கான ஏற்பாடு களையும் அரசாங்கம் எடுத்துள்ளதை அமைச்சர் ஜனில் சுட்டினார். சேவைத் தடை ஏற்பட்டால் அதை உடனடியாகக் கண்டறியும் ஆற்றல் கொண்ட முறையும் நடப்பில் உள்ளது என்றும் சேவைத் தடையின் தாக்கத்தை இது குறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய அரசாங்கப் பரிவர்த்
தனைகளை பொதுமக்கள் இணையத்தை அதிகம் நம்பியிருக்காமல் வேறு வழிகளிலும் செய்யலாம் என்றார் அவர். நேரில் சென்றும் அல்லது தொலைபேசி வாயிலாகவும் இத்தகைய பரிவர்த்தனை
களைச் செய்யலாம் என்றார் டாக்டர் ஜனில்.
அடுத்த ஆண்டுக்குள் தகுதி பெறும் தேசிய மின்னிலக்கச் சேவைகளில் 70 விழுக்காடு சேவைகளை கிளவுட் தளத்துக்கு மாற்ற அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 'வர்த்தக கிளவுட் ஹோஸ்டிங்' தளம் செயல்படுகிறது.
அரசாங்க மின்னிலக்கச் சேவைகளில் குறைந்தது பாதி அளவு அரசாங்க வர்த்தக கிளவுட் சேவைத் தளத்தில் இருப்பதாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு கடந்த ஜூன் மாதம் தெரிவித்தது.
இதன் விளைவாக வர்த்தக ரீதியாக எளிதில் கிடைக்கும் கிளவுட் தீர்வுகளை அரசாங்க அமைப்புகள் பயன்படுத்தி மின்னிலக்கச் சேவைகளை வழங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அரசாங்கத்தின் மின்னிலக்க உள்கட்டமைப்பு துடிப்புடனும் மீள்திறனுடனும் உள்ளது. ஒவ்வொரு கட்டமைப்பையும் கிளவுட் தளத்தில் போடுவதைத் தவிர்த்து செலவினத்தை 40 விழுக்காடு வரை அரசாங்கம் குறைத்திருப்பதாக 'கவ்டெக்' அமைப்பு தெரிவித்திருந்தது.
எத்தனை உள்ளூர் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் மின்னிலக்கச் சேவைத் தடைகளை எதிர்கொண்டன என்றும் டாக்டர் ஜனிலிடம் கேட்கப்பட்டது.
பாதுகாப்புமிக்க சுகாதாரப்
பராமரிப்புச் செயலிகள் அறிமுகப்
படுத்தப்படுவதை உறுதி செய்ய எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் அவரிடம் வினா எழுப்பப்பட்டது.
தனது கட்டமைப்புகளை வலுப்
படுத்தி சேவைத் தடைகளைக் குறைக்க, அரசாங்கம் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.

