நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர்கள் தங்கும் அறையில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் லெஃப்டினென்ட் கர்னல் ஒருவர் $15,000 பிணையில் செல்ல நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
மனநலக் கழகத்தில் அவரை விசாரணைக் கைதியாக வைக்க உத்தர விடப்பட்டதைத் தொடர்ந்து பிணை வழங்கப்பட்டது.
நியோ அய்க் சியாவ், 45, எனப்படும் அவரது தற்போதைய மனநிலை குறித்து நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதேநேரம் உளவியல் நிபுணருடனான அடுத்தகட்ட மனநலப் பரிசோதனைக்கு அவரை மனநலக் கழகம் பரிந்துரைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல் 2023 ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆகாயப் படையின் சினூக் உட்பட பல ஹெலிகாப்டர்களை இயக்கியவர் நியோ. இம்மாதம் 13ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் 18 வயது, 21 வயது உடைய இரு பெண்களின் தங்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் எவ்வாறு அதனுள் நுழைந்தார் என்பது பற்றி தகவல் தெரிவிக்கப்பட வில்லை.
21 வயதுப் பெண்ணின் இடது தொடையைத் தொட்டு மானபங்கம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பெண்ணின் பாதுகாப்புக் கருதி அவரைப் பற்றிய விவரங்களும் தங்கும் அறை தொடர்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, நியோ சிங்கப்பூர் ஆகாயப் படையின் எல்லாவிதப் பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தற்காப்பு அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
தங்களது மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் அத்துமீறி நுழைவது கடுமையாகக் கருதப்படும் என்றும் என்டியு குறிப்பிட்டுள்ளளது. மானபங்கக் குற்றத்துக்கு ஈராண்டு வரையிலான சிறை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகள் தனித்தோ சேர்த்தோ விதிக்கப்படலாம்.

