முதியோர் மின்னிலக்க நடைமுறைகள் பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஒரு செயல்திட்டத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் 210,000 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
மவுண்ட்பேட்டன் தொகுதி உறுப்பினர் லிம் பியாவ் சுவா னுக்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர், மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்துவது எல்லாருக்குமே வசதியானதாக இருக்காது என்பது அரசுக்கு முற்றிலும் தெரியும் என்றார்.
முதியோர் மின்னிலக்கமய செயல்திட்டத்தின்படி, குடியிருப்பாளர்கள், குறிப்பிட்ட நூலகங்களில், சமூக நிலையங்களில் செயல்படும் எஸ்ஜி மின்னிலக்க சமூக மையத்திற்குச் சென்று நேருக்கு நேர் அல்லது சிறிய குழுக்களாகச் சேர்ந்து மின்னிலக்கத் தேர்ச்சிகளைக் கற்கலாம் என்று அவர் கூறினார்.
இணையத்தில் பாதுகாப்பாக நடந்து கொள்வது, நவீன கைப்பேசியைப் பயன்படுத்துவது, இத்தகைய சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது போன்றவை பற்றி அவர்கள் கற்றுக்கொள்ளலாம்.
பல அமைப்புகள் நேருக்கு நேர் சேவைகளை வழங்குகின்றன. அரசாங்கச் சேவை, ஐந்து எஸ்ஜி சேவை நிலையங்களை அமைத்து இருக்கிறது.
அவற்றில் அதிகாரிகள் இருப்பார்கள். அவர்கள் மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை பற்றி குடியிருப்பாளர்களுக்கு உதவுவர்.
அதிகமாக பயன்படுத்தக்கூடிய அரசாங்கச் சேவைகளைக் குடியிருப்பாளர்கள் பெற்று அவற்றின் வழி தங்கள் பணிகளை மக்கள் முடிக்கவும் அவர்கள் உதவுவர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அவ்வளவாக மின்னிலக்க நாட்டம் இல்லாத குடியிருப்பாளர்களைப் பொறுத்தவரை, அவர்களுடன் அரசாங்கம் தொடர்புகொள்ள இணையம் சாராத இதர வழிகளிலும் தொடர்ந்து முக்கியமானவையாக இருக்கின்றன என்றார் திருவாட்டி டியோ.
அதேவேளையில், மின்னிலக்க தகவல் தொடர்பு வழிகளின் பயனீடு அதிகரித்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

