ஜூரோங் பறவை பூங்காவில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பறவைகளும் ஏறத்தாழ 50 தாவர சிற்றினங்களும் மண்டாய் பறவை பூங்காவிற்கு இடம்மாறும்.
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
ஜூரோங் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் ஹுவாங்கிற்குப் பதிலளித்துப் பேசிய அவர், 2023 ஜனவரி 3ஆம் தேதி ஜூரோங் பறவை பூங்கா மூடப்படுவதற்குப்பின் அங்கிருக்கக்கூடிய உயிரினங்கள் தொடர்பான திட்டங்கள் பற்றி கருத்துரைத்தார்.
ஜூரோங் பறவை பூங்கா மூடப்படுவதை அடுத்து அந்தப் பூங்காவின் உயிரினங்களுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றி அந்த உறுப்பினர் கேட்டிருந்தார்.
புதிய பூங்கா 17 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து இருக்கும்.
அது அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும். மண்டாய் காட்டு உயிரினக் காப்பகத்தில் அமைந்து இருக்கும் காட்டு உயிரின பூங்காக்களின் பகுதியாக அது இருக்கும்.
அதில் 400க்கும் மேற்பட்ட சிற்றினங்களைச் சேர்ந்த 3,500 பறவைகளை நடந்து சென்று பார்வையாளர்கள் ரசிக்கலாம்.
ஜூரோங் பறவை பூங்காவின் இப்போதைய இடம் 2025ல் ஜூரோங் நகராண்மைக் கழகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் திரு டான் தெரிவித்தார்.
இந்தக் கழகமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் கூட்டாக அந்த 20 ஹெக்டர் பரப்பளவுள்ள பறவைப் பூங்காவின் நீண்டகால பயனீட்டுத் திட்டங்கள் பற்றி மறுபரிசீலனை செய்து வருவதாக அவர் கூறினார். இதில் தேசிய பூங்காக் கழகமும் இதர அமைப்புகளும் ஈடுபட்டு இருக்கின்றன.
இதில் பறவை பூங்காவின் நீர்வீழ்ச்சி, பக்கத்தில் இருக்கும் ஜூரோங் ஹில் கோபுரம் போன்ற இப்போதைய அம்சங்களைப் பரிசீலனையில் எடுத்துக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூரோங் ஹில், பறவைப் பூங்கா இடம் ஆகியவற்றுக்கான எதிர்கால திட்டங்களுக்கு உருக்கொடுக்கும் முயற்சியின் பகுதியாக உரிய நேரத்தில் பொதுமக்கள் கருத்துகள் நாடப்படும் என்றும் அவர் கூறினார்.

