மத்திய விரைவுச்சாலையில் மிதமிஞ்சிய வேகத்தில் வாகனமோட்டிய குற்றத்திற்காக ஒன்பது ஆடவர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் 25 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிடிஇ எனப்படும் மத்திய விரைவுச்சாலையில் மணிக்கு 90 கிலோமீட்டர் என்னும் வேகவரம்பு உள்ளது. ஆனால் இவர்கள் மணிக்கு 137 கிலோமீட்டருக்கும் 155 கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட வேகத்தில் வாகனங்களைச் செலுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
சீன் சூன் ஸி ஹாங், 38, கென்னத் ஃபூ யோங்லி, 32, லுயிஸ் லீ ரென் ஜுன், 26, ஓ ஜியா ஃபூ, 27, லின்கோன் பே வெ ணு குயாங், 26, லிம் யு ஷன், 28, பிரையன் அந்தோனி யாப், 25, இயான் கூ யே சியாங், 27, மற்றும் டேரில் ஆங் குயி ஹாவ், 27 ஆகியோர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். சூங், ஃபூ மற்றும் லீ இதற்கு முன்னரும் இதேபோன்ற குற்றங்களைப் புரிந்ததால் மீண்டும் குற்றம் செய்தோருக்கான கூடுதல் தண்டனை இவர்களுக்கு விதிக்கப்படக்கூடும்.
இவ்வாண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் மத்திய விரைவுச்சாலையில் அதிவேகத்தில் பல வாகனங்கள் கண்மூடித்தனமாக சென்றது குறித்தும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல படுவேகத்தில் சென்றது குறித்தும் காவல்துறைக்குத் தகவல் சென்றது.
காவல்துறை கேமரா மற்றும் கண்காணிப்புப் படச் சாதனங்கள் வழியாக 16 ஓட்டுநர்கள் மார்ச் 9ஆம் தேதி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் குற்றத்துக்கு அதிகபட்சம் $5,000 அபராதம், ஓராண்டு வரையிலான சிறை ஆகியன விதிக்கப்படலாம்.
மறுபடியும் குற்றம் புரிவோருக்கு இந்தத் தண்டனை இரட்டிப்பு ஆகும்.

