2023 மார்ச் 22ஆம் தேதி ஜெட்ஸ்டார் நான்காவது முனையத்துக்கு மாறும்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குறைந்தக் கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார், அடுத்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதியிலிருந்து சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் செயல்படவுள்ளது. ஜெட்ஸ்டார் நிறுவனக் குழுமமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் அது குறித்து நேற்று கூட்டறிக்கை விடுத்தன.
ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம், முதற்கட்டமாக நான்காம் முனையத்திலிருந்து சிங்கப்பூருக்கும் தென்கிழக்காசியா முழுவதற்கும் இடையே 200க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை வழங்கும். அக்குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஜெட்ஸ்டார் ஏர்வேஸ், சிங்கப்பூருக்கும் மெல்பர்னுக்கும் இடையே வாரம் ஆறு முறை சென்று வரும்.
ஜெட்ஸ்டார் குழுமம், நான்காவது முனையத்துக்கு இடம்பெயரும் என்று சாங்கி விமானக் குழுமம் ஜூலையில் அறிவித்தபோது, ஜெட்ஸ்டார் அதற்கு இணங்க மறுத்தது.
பலமாதப் பேச்சுவார்த்தைக்கும் கூட்டு ஆய்வுக்கும் பின்னர் ஜெட்ஸ்டார் நான்காம் முனையத்துக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறைவான சிங்கப்பூர்வாசிகளுக்கு
எச்ஐவி கிருமி, எய்ட்ஸ் நோய்
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, எச்ஐவி கிருமி, எய்ட்ஸ் நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடுபோது 14 விழுக்காடு குறைந்திருந்தது.
கடந்த 2012ஆம் ஆண்டில் அதற்கு முன் இல்லா எண்ணிக்கையாக 469 பேருக்கு எச்ஐவி, எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முதல், நோய் இருப்பதாகக் கண்டுபிடிப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுவதை ஒட்டி சுகாதார அமைச்சு வழக்கம்போல எயிட்ஸ் நோயுள்ளவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை நேற்று வெளியிட்டது.
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 71 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், 102 பேருக்கு எச்ஐவி கிருமி இருப்பது தெரிய வந்தது. அவர்களில் 93 விழுக்காட்டினர் ஆண்கள்.
டிசம்பர் முதல் பாதியில் இடிமழை
அடுத்த இரண்டு வாரங்களில் இடி, மழையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சில நாள்களில் வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் அது தெரிவித்தது.
தற்போதைய வடகிழக்கு பருவமழையால் சிங்கப்பூரிலும் மழை பெய்யும் என்றும் இந்நிலை அடுத்த சில மாதங்களுக்குத் தொடரும் என்றும் அது கூறியது.
தீவின் சில பகுதிகளில் பெரும்பாலான நாள்களில் பிற்பகலில் சிறிது நேரத்துக்கு மிதமான மழையிலிருந்து கடும் மழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சேவை குறிப்பிட்டது. சில நாள்களில் கடும் மழை மாலை வரை தொடரலாம். சுமத்ரா புயல்மழையால் சில காலை நேரங்களில் இடி, மழையும் பலத்த காற்றும் ஏற்படலாம்.
டிசம்பரின் முதல் இரண்டு வாரங்களில் சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் ஒட்டுமொத்த மழைப்பொழிவு சராசரி அளவில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது. அவ்வாரங்களில் அன்றாட வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.