அதிகரித்துள்ள கோழி இறைச்சி விலை, குறைவான எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்படும் கோழிகள் ஆகிய காரணங்களால் கோழி இறைச்சி விற்பவர்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலேசியா கோழி ஏற்றுமதியை நீக்கி ஏழு வாரங்களான நிலையிலும் வணிகர்களின் வருமானம் வழக்கநிலைக்கு திரும்பவில்லை.
புக்கிட் தீமா, கிம் மோ, பெடோக் ஆகிய வட்டாரங்களில் உள்ள ஈரச் சந்தைகளுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றிருந்தது. தடை வருவதற்கு முன் ஒவ்வொரு கோழியை விற்கும் அதே இலாபம்தான் இப்போதும் கிடைப்பதாக வணிகர்கள் கூறினர். இருப்பினும், விற்பதற்கு குறைவான கோழிகளே இப்போது கிடைப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூருக்கு மாதந்தோறும் 1.8 மில்லியன் பிராய்லர் கோழிகள் அனுப்பப்படும் என்று மலேசியா அக்டோபர் மாதம் தெரிவித்தது. தடை நடப்புக்கு வருவதற்கு முன், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக இருந்தது.
இந்நிலையில், கோழி விலை அதிகரித்திருப்பதால் வாடிக்கையாளர்கள் பலர் முன்புபோல் அடிக்கடி கோழி இறைச்சி வாங்குவதில்லை என்று கடைக்காரர்கள் கூறினர்.
முன்பு $10 விற்கப்பட்ட கோழி இப்போது $20 விற்கப்படுகிறது. இதனால் வாரயிறுதிகளில் மட்டுமே பலர் கோழி வாங்குவதாகக் கடைக்காரர்கள் குறிப்பிட்டனர்.
வேறுசிலர் மலிவான விலையில் விற்கப்படும் உறைந்த கோழி இறைச்சியை வாங்குகின்றனர். உயிர் கோழிக்கும் உறைந்த கோழிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என அவர்கள் எண்ணுகின்றனர்.