பிடிஓ வீட்டு விலை குறித்து தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன்
நிலத்தின் விலையைக் கருத்தில் கொள்ளாமல், தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் 'பிடிஓ' வீடுகளின் விலையைப் பெரிதும் குறைத்தால் அது சிங்கப்பூரர்களுக்கு உதவுவதற்குப் பதிலாகத் தீங்காக முடியும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன் கூறியுள்ளார்.
அரசாங்க நிலம் நாட்டின் கையிருப்பின் ஒரு பகுதி என்பதால் சந்தை விலைக்கேற்ப அதற்கான விலையைச் செலுத்தாமற்போனால் அதன்வாயிலாக கையிருப்பின் மதிப்பு குறையும் என்றார் அவர்.
இப்போதைய தலைமுறையினர் மட்டுமன்றி வருங்காலத் தலைமுறையினருக்கும் அது தீங்கு விளைவிக்கும் என்று அவர் நேற்று முன்தினம் பேஸ்புக்கில் கூறியிருந்தார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
முன்னதாக இம்மாதம் 8ஆம் தேதி, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் விலையைக் கட்டுப்படியானதாக வைத்திருக்கப் போதுமான அளவிற்கு அரசாங்கத்தின் மானியங்கள் உள்ளனவா என்று திரு லியோங் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தார்.
அரசாங்கம் முன்னோடித் தலைமுறையினரிடம் இருந்து முன்னர் குறைவான விலையில் நிலத்தை வாங்கியதால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளின் விலையை நிர்ணயிக்கும்போது அதில் நிலத்துக்கான விலையைச் சேர்க்கக்கூடாது என்று அவர் கூறியிருந்தார்.
'பிடிஓ' வீடுகளின் விலையில் நிலத்தின் விலையையும் சேர்த்துக்கொள்வது அவசியம் என்று திருவாட்டி சிம் விளக்கினார்.
வீடுகளின் விலையைக் கட்டுப்படியானதாகவும் நிலையாகவும் வைத்திருக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தின் நான்கு அல்லது ஐந்தாண்டுக்கான மொத்த வருமானத்தை வீடு வாங்கப் பயன்படுத்துகின்றனர். உலகின் மற்ற நகரங்களில் உள்ளோர் இதற்கென எட்டு முதல் 20 ஆண்டு வருமானத்தைச் செலவிடுவதை அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரர்கள் பெரும்பாலும் மத்திய சேம நிதியிலிருந்து வீட்டுக் கடனுக்கான பணத்தைச் செலுத்துவதை அவர் சுட்டினார்.
அரசாங்கம் சிங்கப்பூரர்களின் அக்கறைகள், தேவைகள் ஆகியவை தொடர்பில் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறிய திருவாட்டி சிம் ஆன், இத்தகைய நிதியுதவிகள் தொடரும் என்று உறுதியளித்தார்.

