'ஜிசிஇ' வழக்கநிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் 19ஆம் தேதி வெளியாகும்
இவ்வாண்டின் பொதுக்கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் 19ஆம் தேதி வெளியிடப்படும். கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் நேற்று இதனை அறிவித்தன. மாணவர்கள் 19ஆம் தேதி பிற்பகல் இரண்டு மணியிலிருந்து அவரவர் பள்ளிகளில் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். பெற்றோரோ பராமரிப்பாளரோ அவர்களுடன் செல்ல இயலும். உடல்நிலை சரியில்லாத மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப் பட்டுள்ளனர். கழகத்தின் இணையப் பக்கத்தில் இம்மாதம் 19ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிமுதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
குறுகியகாலக் கல்விச் சான்றிதழை அதிகம் நாடும் சிங்கப்பூரர்கள்
பணி மேம்பாட்டுக்கு உதவும் சான்றிதழ்களுக்கான குறுகிய காலக் கல்வியைக் கூடுதலான சிங்கப்பூரர்கள் நாடுவதாகத் தெரியவந்துள்ளது. ஒப்புநோக்க சென்ற ஆண்டைவிட கூடுதலாக 42 விழுக்காட்டினர் இவ்வாண்டு இப்பாடத் திட்டங்களை நாடியதாக இணையக் கல்விச் சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனமான 'கோர்ஸ் இரா' கூறியது. பெரும்பாலும் தரவு ஆய்வு, திட்ட நிர்வாகம் ஆகியவை தொடர்பான பாடங்களில் சிங்கப்பூரர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். இவற்றை மூன்று முதல் 12 மாதங்களில் முடித்துவிடலாம் என்பதுடன் இவற்றுக்கான சான்றிதழ்களை, துறைசார்ந்த நிறுவனங்கள் அங்கீகரிப்பதும் இதற்குக் காரணம்.

