சிங்கப்பூரில் இருந்து கப்பலில் பொருள்களை அனுப்பும் சேவையை வழங்கிவருகிறது தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ அண்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்.
இதன் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பொருள்கள் உரிய முகவரிக்கு சென்றுசேரவில்லை என்று கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 72 புகார்கள் பதிவாகியுள்ளன. புகாரளித்தோரில் பெரும்பாலோர் ஏறக்குறைய ஓராண்டு காலம் ஆகியும் பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மின்னணுச் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், உணவு, உடை உள்ளிட்ட இந்தப் பொருள்களின் மதிப்பு $90க்கும் $20,000க்கும் இடைப்பட்டிருப்பதாக 'கேஸ்' எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.
இதன் தொடர்பில் உதவி செய்யவோ பணத்தைத் திருப்பித் தரவோ நிறுவனம் ஒத்துழைக்கவில்லை எனப் புகாரளித்தோர் கூறினர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பொருள் விநியோகிக்கும் சேவையை நிறைவு செய்ய இயலாது எனத் தெரிந்தும் வாடிக்கையாளரிடம் பொருள்களையும் கட்டணத்தையும் வசூலிப்பது சிங்கப்பூரின் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றமாகும்.
இத்தகைய நியாயமற்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இணங்கும் உடன்படிக்கையைத் தானாகவே முன்வந்து செய்யும்படியும் வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு முறையான தீர்வுகாணும்படியும் நிறுவனத்திற்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக 'கேஸ்' கூறியது.
லிட்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்த தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனம் மூடப்பட்டிருந்ததையும் வேறு இடத்துக்கு மாற இருப்பது குறித்த அறிவிப்பு கதவில் ஒட்டப்பட்டிருந்ததையும், சென்ற வாரம் புதன்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரில் கண்டறிந்தது.
சென்ற ஆண்டு மே மாதம் ஐந்து பெட்டிகளில் வீட்டு உபயோகப் பொருள்களை அனுப்ப $900 செலுத்தியதாகக் கூறினார் சந்தானம் முத்துகார்த்திகேயன்.
இவர் அனுப்பியவற்றில் $869 மதிப்புள்ள சம்சுங் தொலைக்காட்சிப் பெட்டி, வெளிநாடுகளில் சுற்றுலா சென்றபோது எடுத்த சட்டமிடப்பட்ட படங்களும் அடங்கும்.
பலமுறை தொடர்புகொண்டும் நிறுவனம் தெளிவான தகவல்களைத் தரவில்லை என்றார் இவர்.
மறைந்த தாயாரின் திருமணச் சேலை உள்ளிட்ட, நினைவில் நிற்கும் பல பொருள்கள் இன்னும் வந்து சேரவில்லை என்றார் பிரியங்கா மிஸ்ட்ரி.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் $250 செலுத்தி சிங்கப்பூரில் இருந்து பூனாவிற்கு இப்பொருள்களை இவர் அனுப்பினார்.
சிங்கப்பூர்ிலிருந்து பொருள்கள் இந்தியா சென்றுசேர மாதக் கணக்கில் காத்திருப்பது வழக்கத்துக்குப் புறம்பானது என்று கூறினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சில கப்பல் நிறுவனத்தினர்.
பொருள்கள் சென்று சேராவிட்டால் வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியவை
வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருள்கள் குறித்த நேரத்தில் சென்று சேராவிட்டால் வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து வழக்கறிஞர்கள் சிலரைக் கேட்டறிந்தது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்:
* பொருள்களின் மொத்த மதிப்பு $20,000க்குக் குறைவு என்றால் சிறு கோரிக்கை மன்றத்திடம் புகாரளிக்கலாம்.
* புகாரளிப்போர் தாங்கள் கோரும் தொகைக்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
* தொகையைத் திருப்பித் தரும்படி நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தால் அதனை அமலாக்கும்படி வாடிக்கையாளர் வலியுறுத்தலாம். முதலில் விநியோகச் சேவை நிறுவனத்தின் சொத்துகளை மதிப்பிடும்படி நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கலாம்.
* நிறுவனம் ரொக்கமாக இழப்பீட்டுத் தொகை தராவிட்டால் அதன் சொத்துகளை முடக்கும்படி நீதிமன்றத்திடம் மனு கொடுக்கலாம்.
* சம்பந்தப்பட்ட நிறுவனம், நியாயமற்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இணங்கும் உடன்படிக்கையைத் தானாகவே முன்வந்து செய்துகொண்டிருந்தால் அதன்மீது 'கேஸ்' எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். நிறுவனம் இந்த உடன்படிக்கையை மீறினால் அது நீதிமன்ற அவமதிப்புக்குச் சமமாகும்.
* நிறுவனத்தின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புவோர், பொருள்களைக் குறிப்பிட்ட தேதிக்குள் விநியோகிக்க அது ஒப்புக்கொண்டதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பித்தல் அவசியம்.

