பொன்மணி உதயகுமார்
'மணல் உரையாடல்' எனும் தலைப்பில் சென்னை தமிழ் அலை பதிப்பக உரிமையாளர் இசாக் எழுதிய கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்க நூலை டாக்டர் எச் முகமது சலீம் எழுதியுள்ளார்.
'மியூசிங்ஸ் இன் த டியூன்ஸ்' என்ற தலைப்பிலான இந்நூலின் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா இஸ்லாமிய நிலையத்தில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தனது 90வது ஆண்டை கொண்டாடும் ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனத்தை வாழ்த்திய அவர், கலை, இலக்கியம், கலாசாரம் போன்றவற்றை மேம்படுத்துவது, ஒற்றுமையையும் அமைதியையும் நன்மையையும் வளர்க்க ஜாமியா எடுக்கும் முயற்சிகளில் ஒன்றென சுட்டிக் காட்டினார்.
அதோடு, இந்திய வம்சாவளியினரையும் சிங்கப்பூர் இந்தியர்களையும் ஒன்றிணைக்க இது போன்ற புத்தக வெளியீடுகள் வழிவகுக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மூல நூலை இயற்றிய கவிஞர் இசாக் இதன் மூலம், உலகெங்குமுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளக் கூடிய சிக்கல்களையும் மன வலிகளையும் வெளிப்படுத்த முனைந்துள்ளார்.
இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் ஜாமியா சிங்கப்பூர் அறநிறுவனத்தின் சமூக நல்லிணக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் டாக்டர் சலீம்.
'மியூசிங்ஸ் இன் த டியூன்ஸ்' வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை உணரவும் அவர்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டுள்ள கண்ணோட்டம் மாறவும் வழிவகுக்கும் என்றார்.
சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சிக்குச் செழுமை சேர்க்கும் வகையில் தரமான தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலம், சீனம், மலாய் ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென விரும்புகிறார் இவர்.

