உள்ளூர் மருத்துவக் கருவி தயாரிப்பு நிறுவனமான 'பஸுட் சிங்கப்பூர்' 2023ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல பகுதிகளிலும் 20 சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கவிருக்கிறது.
சில்லறை விற்பனைத் துறையில் தனது தொழிலை விரிவுபடுத்தும் வகையில் அடுத்த மூவாண்டுகளில் $100 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பஸுட் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
உட்லண்ட்சில் 200,000 சதுர அடிக்குமேலான பரப்பளவுடன் மூன்று தளங்களைக் கொண்ட புதிய தொழிற்சாலையையும் ஆய்வு, உருவாக்க மையத்தையும் அது திறக்க இருக்கிறது.
கடந்த 2020ல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட அந்நிறுவனம் தற்போது ராஃபிள்ஸ் மருத்துவமனை யில் ஒரு சில்லறை விற்பனைக் கடையைக் கொண்டுள்ளது.
சிறுநீர், ரத்தச் சர்க்கரை, கொழுப்புப் பொருள் பரிசோதனைக் கருவிகள், கையடக்க இசிஜி இதயப் பரிசோதனைக் கருவிகள் மருத்துவக் கருவிகளையும் இல்லப் பயன்பாட்டுக் கருவிகளையும் திறன்கடிகாரங்கள் போன்றவற்றையும் வாழ்வியல் கருவிகளையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
"வீட்டிலேயே சுயபரிசோதனை செய்துகொண்டு, முன்கூட்டியே நோய் அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவ ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட, பயன்படுத்துவதற்கு எளிதான எங்களது நிறுவனத்தின் உடல்நலப் பரிசோதனைக் கருவிகள் உதவும். அதற்கேற்ப, நமது வாழ்க்கைமுறையையும் அன்றாடச் செயல்பாடுகளையும் மாற்றியமைத்துக்கொண்டு உடல்நலம் பேணலாம்," என்று பஸுட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஃபிராங்கி ஃபான், 53, கூறினார்.
அத்துடன், பேரகான், ஜுவல் சாங்கி, மரினா பே சேண்ட்ஸ் போன்ற இடங்களில் அமையும் சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சில பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும் என்றும் அவர் சொன்னார்.
"தொழில்நுட்பம், மின்னலக்கக் கருவிகள் குறித்து அறிமுகம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு எங்கள் பணியாளர்களால் உதவ முடியும்," என்றார் சீனாவில் பிறந்தவரான திரு ஃபான்.
பொதுமக்கள் இல்லப் பயன்பாட்டுப் பரிசோதனைக் கருவிகளைப் பரிசோதனை மையத்தில் சோதித்துப் பார்க்கலாம். அம்மையத்தில் உள்ள நிபுணத்துவ மருத்துவக் கருவியைப் பயன்படுத்தி பரிசோதனை செய்துகொள்ள அங்கு மருத்துவப் பணியாளர்களும் இருப்பர்.
தங்களது மருத்துவக் கருவிகள் சுகாதார அறிவியல் ஆணையத்தின் உரிமம் பெற்றவை என்றும் பஸுட் நிறுவனம் தெரிவித்தது.
இதனிடையே, தங்களது சில்லறை விற்பனைக் கடைகளுக்காக சிங்கப்பூரில் குறைந்தது 200 பேரையும் தொழிற்சாலை மற்றும் ஆய்வு, உருவாக்க மையத்திற்காக 100 பேரையும் வேலைக்கு எடுப்போம் என்று பஸுட் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

