பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகளை ஏமாற்றியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை மூவர் எதிர்நோக்குகின்றனர்.
போக்குவரத்து சார்ந்த வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த அவர்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் தொடர்பில் சதித்திட்டம் தீட்டி, ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது.
குற்றச் செயல்களைப் புரிந்ததாகக் கூறப்படும் சமயத்தில் டியோ சியோ மெங், 50, டி&எல் டிரான்சிட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். சுந்தரம் ரத்தினம், 50, எஸ்வி பேருந்துப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் ஒரே உரிமையாளராக இருந்தார்.
மூன்றாமவரான டீ வெய் சை, 44, லீ சொங் எஞ்சினியரிங் எனும் வாகனச் சோதனை நிறுவனத்தில் பொறிநுட்பராக (மெக்கானிக்) வேலைசெய்து வந்தார்.
2017 ஜூன் மாதத்திற்கும் 2018 ஜனவரி மாதத்திற்கும் இடையில் இருமுறை, பேருந்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு, அது செயல்பாட்டில் இருப்பதாகப் பொய் சொல்லி, இம்மூவரும் சதி செய்து 'வைகோம்' வாகன ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவரை ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை வேகக்கட்டுப்பாட்டுச் சோதனையில் அப்பேருந்து தேர்ச்சி பெற்றுவிட்டதாகச் சான்று தரும்படி இம்மூவரும் அந்த ஆய்வாளரைத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2015 ஜூலைக்கும் 2018 ஜனவரிக்கும் இடையில் டியோ எட்டு முறையும் சுந்தரம் ஒருமுறையும் நிலப் போக்குவரத்து ஆணையத்தை ஏமாற்றியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பேருந்து 60 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வகையில், 2017 ஜூனில் அல்லது அதற்குமுன் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை மாற்றியமைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை டீ எதிர்நோக்குகிறார்.
குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் நேற்று $5,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டது. அவர்கள்மீதான வழக்கு வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏமாற்றிய குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மூவாண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

