சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 23 நிலையங்களிலும் தீ எச்சரிக்கை ஒலி
ஹெண்டர்சன் ரோடு வாடகை வீடு ஒன்றில் மூண்ட தீயை அணைக்க முயன்று அந்த முயற்சியில் மாண்டுவிட்ட 19 வயது முழுநேர தேசிய சேவையாளர் முதல் நிலை சார்ஜண்டாக மரணத்திற்குப்பிந்திய பதவி உயர்வு பெற்றார்.
முதல்நிலை சார்ஜண்ட் எட்வர்ட் எச். கோவைப் பெருமைப்படுத்தும் வகையில் நேற்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 23 தீயணைப்பு நிலையங்களிலும் தீ எச்சரிக்கை ஒலி ஒலித்தது.
உபியில் இருக்கும் அந்தப் படையின் தலைமையகத்திலும் ஐந்து பிரிவுகளின் தலைமையங்களிலும் குடிமைத் தற்காப்புப் பயிலகத்திலும் நேற்று மௌன அஞ்சலி நடந்தது. அதனைத் தொடர்ந்து சடங்குபூர்வ இறுதிச்சடங்கும் நடந்தது.
அவசரகால அழைப்பு வரும்போது தீயணைப்பு ஊழியர்களை உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்துச் செல்ல விடுக்கக்கூடிய எச்சரிக்கை அறிவிப்பாக தீ எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது.
அந்த ஒலி நேற்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப் பிரிவு கள் அனைத்திலும் ஒலித்தது.
இது அந்த முழுநேர தேசிய சேவையாளருக்கு விடுக்கப்பட்ட இறுதி அழைப்பைக் குறிப்பதாக இருந்தது.
காலமான முதல்நிலை சார்ஜண்ட் கோ, மத்திய தீயணைப்பு நிலையத்தில் பணியில் இருந்து வந்தார்.
அலெக்சாண்டிரா, மரினா பே, பொங்கோல் தீயணைப்பு நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளும் மௌன அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
குடிமைத் தற்காப்புப் படையின் உபி தலைமையகத்தில் சுமார் 300 அதிகாரிகள் கூடி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதற்குப் பிறகு குடிமைத் தற்காப்புப் படை ஆணையர் எரிக் யாப், முதல்நிலை சார்ஜண்ட் கோவுக்குப் புகழாரம் சூட்டினார்.
முதல்நிலை சார்ஜண்ட் கோவின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் அவர் அனுதாபம் தெரிவித்துக்கொண்டார்.
அவருடைய மரணம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை பெரிதும் சங்கடப்படுத்திவிட்டதாக அவர் கூறினார்.
"முதல்நிலை சார்ஜண்ட் கோவின் சுயநலம் பாராத உணர்வு, நிபுணத்துவம், கடப்பாடு ஆகியவற்றை நாம் நினைவுகூர்வோம்.
"முதல்நிலை சார்ஜண்ட் கோ தீயை வெற்றிகரமான முறையில் அணைப்பதில் எந்த அளவுக்குப் பெருமைப்படுவார் என்பதை அவருக்கு அணுக்கமாகக் பழகியவர்கள் அறிவார்கள்," என்றார் அவர்.
குடிமைத் தற்காப்புப் படையில் இருக்கும் அனைவருக்கும் முதல்நிலை சார்ஜண்ட் கோ ஓர் ஊக்கசக்தியாக இருப்பார் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு இந்தப் படையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்றும் ஆணையர் தெரிவித்தார்.
"அவசர காலங்களில் உதவிக்கு இந்தப் படை அதிகாரிகளை பொதுமக்கள் நம்பி இருக்கிறார்கள்.
"அத்தகைய அவசர காலங்களில் தேவைப்படக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரி கள் வாழ்வா, சாவா என்ற போராட்டத்தை எதிர்நோக்குகிறார்கள்," என்றும் ஆணையர் குறிப்பிட்டார்.
"முதல்நிலை சார்ஜண்ட் கோவைப் போலவே சிங்கப்பூரர்களுக்குப் பெருமையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் தொடர்ந்து நாங்கள் சேவையாற்றுவோம்," என்றும் ஆணையர் உறுதி கூறினார்.

