மோனலிசா
இளையர்கள் செய்தித் துறையில் தங்களுடைய திறமைகளை மேம்
படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் எஸ்பிஎச் மீடியாவும் தேசிய இளையர் சாதனை விருது மன்றமும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பத்திரிகைத் துறையின் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் எஸ்பிஎச் மீடியாவின் தயாரிப்புகளின் வளர்ச்சியில் பங்குபெறவும் இளையர்
களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
சிங்கப்பூரின் பசுமைத் திட்டம் 2030ஐ ஆதரிக்கும் இவ்வொப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலான ஓராண்டு காலத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஎச் மீடியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி டியோ லே லிம் மற்றும் தேசிய இளையர் சாதனை விருது மன்றத்தின் நிர்வாக இயக்குநர் திரு ஜேம்ஸ் சோ இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் 'இளையர்கள் முன்னெடுக்கும் செய்தித் துறை' எனும் திட்டத்தில் தொடக்கக் கல்லூரி, தேசிய கல்விக் கழகம், பலதுறைத் தொழில்கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் ஆர்வமுள்ள இளையர்கள் பங்குகொள்வார்கள்.
இத்திட்டத்தின் மூலம் இளையர்களுக்கு எழுதுவதிலும் கதைசொல்வதிலும் புகைப்படக் கலையிலும் பயிற்சி வழங்கப்படும்.
இளையர்கள் மத்தியில் ஊடகத் துறையின் தாக்கம், பயன்பாட்டு முறை, புதிய செய்தித் தளங்கள், மின்னிலக்கத் துறை செய்தி செயலிகளின் பயன்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு காலாண்டிலும் கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடைபெறும்.
இளையர்கள் எஸ்பிஎச் மீடியாவின் பல்வேறு தயாரிப்புகளின் உருவாக்கத்திலும் மேம்பாட்டிலும் பங்குகொள்வார்கள்.
இத்துடன் எஸ்பிஎச் மீடியாவின் வேலைப்பயிற்சிக் கல்வி மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களில்
பங்குகொள்ளும் வாய்ப்புகளும் வழங்கப்படும்.
மேலும் இவ்வொப்பந்தம் தேசிய இளையர் சாதனை விருது
மன்றத்தின் நீடித்த நிலைத்தன்மையுடைய சிங்கப்பூரை உருவாக்கும் பிரசாரத்தையும் ஆதரிக்கிறது.
இதன் ஓர் அங்கமாக நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் விதமாக இளையர்களுக்கான பல்வேறு நடவடிக்கைகளும் பயிற்சிப் பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து பகிர்ந்த தேசிய இளையர் சாதனை விருது
மன்றத்தின் நிர்வாக இயக்குநர் திரு ஜேம்ஸ் சோ, "சிங்கப்பூரின் எதிர்காலத்தை வலிமையாக்கும் இளையர்கள், நீடித்த நிலைத்தன்மையில் ஆர்வம் செலுத்துவது மிகவும் முக்கியம்," என்று கூறினார்.
இந்நிகழ்வில் துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் ஓர் அங்கமாக இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பும் இடம்பெற்றது. எஸ்பிஎச் மீடியாவும் தேசிய இளையர் சாதனை விருது மன்றமும் இணைந்து நடத்திய இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட இளையர்கள் கலந்துகொண்டனர்.
நீடித்த நிலைத்தன்மையை வலியுறுத்தும் புத்தாக்க வாழ்க்கைமுறை சிந்தனைகளை இப்போட்டியில் இளையர்கள் பரிந்துரைக்கவேண்டும்.
இப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற தொடக்கக் கல்லூரி மாணவியான ரக்ஷிதா முருகன், 18, "சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மையை ஆதரிக்க அன்றாட வாழ்வில் செய்ய வேண்டியவை பற்றிய சிந்தனையை இப்போட்டி தூண்டியது.
"ஓர் இளையராக சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள ஊக்கம் அளிக்கும் விதமாகவும் இப்போட்டி அமைந்தது," என்று கூறினார்.

