பெட்ரா பிராங்கா விவகாரம் தொடர்பில் சிங்கப்பூருடன் பலன்பெறும் வகையில் பேச்சு நடத்த ஏதுவாக அதுதொடர்பான அம்சங்களை மறுஆய்வு செய்யும்படி மலேசியத் தலைமைச் சட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
பெட்ரா பிராங்காவின் உரிமையை சிங்கப்பூருக்கு வழங்கியிருக்கும் அனைத்துலக நீதிமன்ற உத்தரவின் தாக்கம் குறித்தும் ஆராயும்படி தலைமைச் சட்ட அதிகாரி இட்ரஸ் ஹருணை திரு அன்வார் கேட்டுக்கொண்டதாக 'த ஸ்டார்' நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
பத்து புத்தே என்று மலேசியாவால் அழைக்கப்படும் பெட்ரா பிராங்கா குறித்து நடத்தப்படும் பேச்சால் இருதரப்பு உறவைப் பாதிக்கும் புதிய சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதைத் தாம் விரும்பவில்லை என்று அமைச்சரவையின் வாராந்தரக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
முன்னதாக 2018ஆம் ஆண்டில் அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது பெட்ரா பிராங்கா தொடர்பான அனைத்துலக நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரும் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றார். அப்போதைய தலைமைச் சட்ட அதிகாரியின் பரிந்துரையின்பேரில் அவர் அவ்வாறு செய்தார். ஆனால் அதில் கவனக்குறைவு இடம்பெற்றதாக கடந்த அக்டோபரில் மலேசிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

