சிங்கப்பூர் துணைப் பிரதமர்கள் லாரன்ஸ் வோங், ஹெங் சுவீ கியட் இருவரும் மலேசியாவின் புதிய துணைப் பிரதமர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள அகமது ஸாகித் ஹமிடி, ஃபடில்லா யூசுஃப் இருவருக்கும் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
மலேசியத் துணைப் பிரதமர்களை விரைவில் சந்திக்க திரு வோங்கும் திரு ஹெங்கும் நேற்று அனுப்பிய கடிதங்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திரு ஸாகித் துணைப் பிரதமராகவும் கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருப்பதற்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து ஏழாவது முறையாக திரு ஸாகித் வெற்றிபெற்றுள்ளது தொகுதிக்கு அவர் ஆற்றிய சேவைக்கும் பொறுப்புகளை அவர் சிறப்பாகக் கையாள்வார் என்பதற்கும் சாட்சி என்று திரு வோங் கூறினார். இவ்வெற்றி மக்கள் அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகத் திரு ஹெங் சொன்னார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஆழமான உறவைச் சுட்டிய இரு துணைப் பிரதமர்களும் கொவிட்-19 காலகட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தனர்.
எப்போதும்போலவே பொதுவான சவால்களைச் சமாளிப்பதில் இரு நாடுகளும் அணுக்கமான ஒத்துழைப்பைத் தொடரும் என்று நம்புவதாகத் திரு ஹெங் குறிப்பிட்டார்.
வருங்காலத்தில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஆராயத் திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

