தெங்கா கொண்டோமினிய கட்டுமானத் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரும்புக் கம்பிகளை வாகனத்தில் இருந்து இறக்கும்போது நடந்த விபத்தில் 32 வயது ஊழியர் ஒருவர் மாண்டார்.
வாகனத்தில் இருந்து இரும்புக் கம்பிகளை இறக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி கவனக்குறைவாக நடந்துகொண்டதாக சந்தேகத்தின்பேரில் 45 வயது ஆடவர் ஒருவரை காவல்துறை கைதுசெய்துள்ளது.
இது இந்த ஆண்டின் 44வது வேலையிட மரணம். கடந்த 2021ஆம் ஆண்டில் 37 வேலையிட மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டில்தான் ஆக அதிகமாக 66 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.35 மணிக்கு இந்த விபத்து குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன. இந்த விபத்தில், இரும்புக் கம்பிகளை கனரக வாகனத்தில் இருந்து இறக்கும்போது பாரந்தூக்கியின் ஒரு பகுதி கழன்று இந்திய ஊழியர் மீது விழுந்தது என்றும் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புத் துணை மருத்துவ ஊழியர்கள் தெரிவித்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
விபத்து குறித்து அதிகாரிகள், கைதுசெய்யப்பட்ட 45 வயது ஆடவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வேளையில், அந்தக் கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி, கனரக வாகன பாரந்தூக்கிகளின் செயல்பாடுகளை நிறுத்திவைக்குமாறு மனிதவள அமைச்சு ஹோ ஹப் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கனமான பொருள்களைக் கையாளும்போது அதற்குக் கீழே ஊழியர்கள் நிற்கக்கூடாது. கண்டிப்பாகப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.

