சிங்கப்பூரை பசுமை சுற்றுலாத் தலமாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக, முதல்முறையாக பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலக பயணத்துறை மன்றம் தனது அனைத்துலக மாநாட்டை 2024 நவம்பரில் இங்கு நடத்தவுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் சிங்கப்பூரின் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள மற்றோர் அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.
சுற்றுச்சூழலைப் பேணும் சிங்கப்பூரின் முயற்சிகளை பிரபலப்படுத்தும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் உத்திபூர்வத் திட்டங்களில் ஒன்றாக இது இடம்பெறுகிறது.
அனைத்துலக மாநாடு 2024 நவம்பர் 13 முதல் 15 வரை நடைபெறும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத சுற்றுலா, பயணத்துறைகளுக்கான உலகத் தரநிலையை இந்த மன்றம் நிர்வகிக்கிறது.
ஸ்பெயினின் செவில் நகரில் நடைபெற்ற இந்த ஆண்டின் அனைத்துலக மாநாடு நேற்று நிறைவடைந்தது.
"2024 அனைத்துலக மாநாட்டை சிங்கப்பூரில் நடத்தும் மன்றத்தின் முடிவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பேணுவதை இலக்காகக் கொண்டு தரமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அனைத்துலக-ஆசிய முனையமாக சிங்கப்பூர் வளர்ந்து வருவதைப் பிரதிபலிக்கிறது," என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் டாக்டர் எட்வர்ட் கோ கூறினார். கழகத்தின் மாநாடுகள், கூட்டங்கள், சுற்றுலாக்களுக்கான நிர்வாக இயக்குநர் இவர்.
"நீடித்த நிலைத்தன்மையைப் பேணுவது சிங்கப்பூருக்கும் பயணத் துறைக்கும் தேசிய முன்னுரிமையாக உள்ளது. உலகளவில் பிரபலமான பயணத்துறைப் பங்காளிகள் சிங்கப்பூரில் கூடி, புதிய பங்காளித்துவங்களை மேற்கொள்வதுடன் நீடித்த நிலைத்தன்மை குறித்த முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசப்போவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது," என்றார் அவர்.
முன்னதாக டிசம்பரில், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் 'மைஸ்' நீடித்த நிலைத்தன்மைக் குழுவும் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி அமைப்பாளர்கள், விநியோகிப்பாளர்களின் சிங்கப்பூர் சங்கமும் நீடித்த நிலைத்தன்மையைப் பேணும் நிகழ்ச்சிகளுக்கான செயல் திட்டத்தை வெளியிட்டன.
'கிளீன்என்விரோ' சிங்கப்பூர் உச்சநிலை மாநாடு, உலக நகரங்களின் உச்சநிலை மாநாடு உள்பட குறைந்தது ஆறு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பேணும் மாநாடுகளை சிங்கப்பூர் இந்த ஆண்டு நடத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான உலக பயணத்துறை மன்றத்தின் அனைத்துலக மாநாட்டுடன், ஆசிய பருவநிலை கருத்தரங்கம் உள்ளிட்ட குறைந்தது ஐந்து நிகழ்வுகள் சிங்கப்பூரில் அடுத்த ஆண்டும் அதற்குப் பின்னரும் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

