கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றின் முந்தைய நாள்களில் பேருந்து, ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
கொண்டாட்டக் களிப்பில் திளைத்திருக்கும் பயணிகள் சற்று தாமதமாக இல்லம் திரும்புவதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டௌன்டவுன் பாதையிலும் வடகிழக்கு பாதையிலும் ரயில் சேவைகள் டிசம்பர் 24ஆம் தேதியன்று ஒன்றரை மணிநேரமும் டிசம்பர் 31ஆம் தேதியன்று இரண்டரை மணிநேரமும் நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்று தெரிவித்தது.
கடைசி வடகிழக்கு ரயில்கள் நகர மத்தியின் நிலையங்களுக்கு வந்து சேர்ந்தவுடன் செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி ரயில்கள் தனது கடைசி ரயில் சேவைகளை நடத்தும்.
வடகிழக்கு, டௌன்டவுன் ஆகிய பாதைகளில் நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள் பற்றிய மேல் விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் https://www.sbstransit.com.sg இணையப் பக்கத்தை நாடலாம்.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைகளில் ஓடும் ரயில்களின் சேவைகளும் நீட்டிக்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் இம்மாதம் 9ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இது குறித்த மேல் விவரங்களுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் www.smrt.com.sg இணையப் பக்கத்தை நாடலாம்.
ரயில் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்படும் வேளையில், எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் 24 பேருந்துகளின் சேவை நேரங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
அவை 60A, 63M, 114A, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 261, 269, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812, 974A ஆகியவை.
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் 13 பேருந்து சேவைகளான 300, 301, 302, 307, 901, 911, 912A, 912B, 913, 920, 922, 973A, 983A ஆகியவற்றின் நேரங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

