தமது 19 வயது மகன் தம்மைத் துன்புறுத்தியதை அடுத்து, 44 வயது பெண் ஒருவர் சட்ட ரீதியாகப் பாதுகாப்பு கோரினார். அதையடுத்து, அவருக்கு எதிராக வன்முறைச் செயல்களில் இறங்கக்கூடாது என்று அந்த இளைஞனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவை நெய்தன் சுபாஷ் புறக்கணித்தார்.
"உன் குடலை உருவிடுவேன். கழுத்தை அறுத்துவிடுவேன், உன்னை அறைவேன்," என்று கடந்த மாதம் 9ஆம் தேதியன்று நெய்தன் தமது தாயாரை மிரட்டினான்.
நெய்தன் தற்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதி மாலை 5 மணி அளவில் செங்காங் வட்டாரத்தில் உள்ள தமது வீட்டில் திசுத்தாள் பெட்டியைத் தமது தாயார் மீது நெய்தான் எறிந்தான்.
கூர்மையான பொருள் ஒன்றைப் பயன்படுத்தி தமது தாயாரின் உடலெங்கும் தொடர்ந்து பலமுறை நெய்தன் குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அக்டோபர் மாத இறுதியில் நெய்தனுக்கும் அவனது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தமது தாயாருக்கு நெய்தன் கொலை மிரட்டல் விடுத்ததாக அறியப்படுகிறது.
தமது தண்டனைக் குறைப்பு வாதத்தைப் பதிவு செய்ய நெய்தனிடம் நீதிமன்றம் கேட்டபோது அவன் எதுவும் கூறவில்லை. இதையடுத்து, நன்னடத்தைக் கண்காணிப்புக்கும் சீர்திருத்தப் பயிற்சிக்கும் நெய்தன் பொருத்தமானவர்தானா என்பதைக் கண்டுபிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 16ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.

