ஒன்றைக் கணித்துச் சொல்வது என்பது சிரமமானதுதான். அதுவும் பொருளியல் நிலவரங்களைக் கணித்துச் சொல்வது என்பது இன்னும் சிரமமானது. பொருளி யல் வல்லுநர்கள் மூன்று பேருக்கு இடையே ஒரு விவாதம் நடந்தது.
ஐந்து விதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பொருளியல் மந்தம் ஏற்படலாம், சீனாவின் கொவிட்-19 தொல்லைகள், எண்ணெய் விலை பிரச்சினைகள், மின்னிலக்க நாணய கோளாறுகள் ஆகியவை 2023 பொருளியல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில அம்சங்கள் என்பது தெரியவந்துள்ளது.
பொருளியல் மந்தம் பற்றிய கருத்துப் பரிமாற்றத்தைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டில் ஏறக்குறைய எங்குமே பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்றுதான் பெரும்பாலான பொருளியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
அடுத்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி 2.7% ஆக இருக்கும் என்று அனைத்துலக பண நிதியம் கூறுகிறது.
என்றாலும்கூட மந்தத்தைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியம் பொருளியல் மந்தம் சாத்தியம் என்கிறது. அதேவேளையில், அமெரிக்காவில் இடம்பெறக்கூடிய நிலவரங்களைப் பொறுத்தே உலகப் பொருளியல் மந்தம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பொருளியல் மந்தத்தைத் தவிர்த்துவிடலாம் என்று நம்பிக்கையாளர்கள் நினைக் கிறார்கள். இவர்கள் பொருளியல் வல்லுநர்களில் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதேவேளையில், பெரும்பாலானவர்கள் பொருளியல் மந்தம் இருக்கும் என்கிறார்கள்.
கேபிஎம்ஜி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் 86% தலைமை நிர்வாக அதிகாரிகள் இப்படிதான் கூறுகிறார்கள். இருந்தாலும் அவர்களில் 60 விழுக்காட்டினர் மந்தம் கொஞ்ச காலத்திற்கு, குறைந்த அளவில்தான் இருக்கும் என்கிறார்கள்.
பொருளியல் கணிப்பாளர்களில் மூன்றில் இரு பங்கினர் அடுத்த ஆண்டு பொருளியல் மந்தத்தை எதிர்பார்ப்பதாக தி வால் ஸ்திரீட் ஜெர்னல் கூறுகிறது.
உலகப் பொருளியல் கணிப்பு பற்றி அக்டோபர் மாதம் அனைத்துலக பண நிதியம் ஓர் எச்சரிக்கை விடுத்தது.
மோசமான காலம் இனிதான் வரப்போகிறது. பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை 2023ல் பொருளியல் மந்தத்தைப் போல உணர்வார்கள் என்று அது தெரிவித்தது. வளர்ச்சி குறையும், பொருள்களின் விலையும் குறையும் என்பதால் அடுத்த ஆண்டு பணவீக்கம் குறையும் என்று பெரும்பாலான பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இருந்தாலும்கூட பொருள், சேவை விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் காரணமாக பணவீக்கம் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வர்த்தக தன்னைப்பேணித்தனம், கொவிட்-19 தலைதூக்குவது முதலானவை இத்தகைய இடையூறுகளில் அடங்கும்.
சீனாவில் அடுத்த ஆண்டில் நிலவக்கூடிய சூழ்நிலைகள் பற்றி பல்வேறு யூகங்கள் இடம்பெறுகின்றன. சீனப் பொருளியல் 2022ல் 3% கூட வளராது என்று பலரும் கணிக்கிறார்கள். அந்த வளர்ச்சி 2023ல் 4% முதல் 5% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
கொவிட்-19 கிருமி அறவே இல்லாத கொள்கையைக் கடைப்பிடித்து வந்த சீனா திடீரென மாறி இருக்கிறது.
இதனாலும் ஆபத்து தலைதூக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. கட்டுப்பாடுகள் தளர்வதால் தொற்று கூடலாம். சீனாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களின் எண்ணிக்கையும் குறைவு.
அப்படி தொற்று கூடினால் அதைக் கட்டுப்பாடுகளுடன் சீனா திறம்பட கையாளும் பட்சத்தில் 2023 இரண்டாம் பாதியில் சீனப் பொருளியல் சூடுபிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி நடந்தால், பொருள்களின் விலைகளும் பணவீக்கமும் கூடினாலும்கூட சீன வளர்ச்சியால் உலகப் பொருளியலுக்கு ஊக்கசக்தி கிடைக்கும்.
எண்ணெய் விலை அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் மற்றோர் அம்சம். எண்ணெய் விலை இப்போது ஒரு பீப்பாய் US$80க்கு விற்கப்படுகிறது.
ரஷ்யா ஏற்றுமதி செய்யும் எண்ணெய்க்கு ஒரு பீப்பாய் US$60 என்ற வரம்பை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜி7 நாடுகள் விதித்தன. இன்னமும் ரஷ்ய எண்ணெய்யை கொள்முதல் செய்யும் சீனா, இந்தியா உள்ளிட்ட இதர நாடுகள் மேலும் தள்ளுபடி விலையில் எண்ணெய்யைப் பெற பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் எண்ணெய் விலை குறைந்தால், உலகளவில் மந்தம் உறுதிப்படக்கூடிய நிலை ஏற்படலாம்.
எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கை யில், இப்போதைய விலையைவிட அடுத்த ஆண்டில் எண்ணெய் விலை அதிகமாகத்தான் இருக்கும் என்றுதான் பெரும்பாலானவர்கள் கணிக்கிறார்கள்.
மின்னிலக்க நாணயச் சொத்துகள் பெரும் அடிவாங்கி இருக்கின்றன. 2021ல் US$2.8 டிரில்லியன் அளவுக்கு இருந்த அந்தச் சொத்துகள், 2022 டிசம்பர் 10 நிலவரப்படி ஏறக்குறைய 70% குறைந்து US$860 பில்லியனுக்கு இறங்கிவிட்டன.
இந்த மின்னிலக்க நாணய நிலவரம் நீடிக்கும் என்றே கண்காணிப்பாளர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
அதேவேளையில், இந்தத் துறையில் சரியில்லாத தரப்புகள் தடுமாறி இருப்பது நல்ல ஆரோக்கியமான மேம்பாடுதான் என்று கூறுவோரும் உள்ளனர்.
மின்னிலக்க நாணய தொழில்துறை 2023ல் சிரமமான பாதையில்தான் தொடர்ந்து செல்லும் என்று நம்புவதற் கான வாய்ப்புகள் தெரிகின்றன.
கடைசியாகப் பார்க்கையில், பல கணிப்புகளையும் பொய்யாக்கிவிடக்கூடிய ஓர் அம்சமும் இருக்கிறது.
சீனாவில் கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சுகாதார நெருக்கடிகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட மோசமாகப் போனால், கணிப்புகள் எல்லாம் தவறிவிடும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நேட்டோ நேரடியாக தலையிடும் பட்சத்தில் ரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடையும் என்று டாக்டர் ரூபினி என்ற வல்லுநர் எச்சரிக்கிறார். இதனால் பல தொடர் விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
அனைத்துலக பண நிதியத்தின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் ஆல்ஃபிரட் காமர், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக சம்பள உயர்வு இடம்பெறலாம் என்று கணிக்கிறார்.
இத்தகைய கணிப்புகள் எப்படி போனாலும் சரி, பொருளியல் மற்றும் நிதிச் சந்தைகளைப் பொறுத்தவரை 2023 ஏற்ற, இறக்கமான ஓர் ஆண்டாகவே இருக்கும் என்பதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.
சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு

