நம்பிக்கைமிக்க உள்ளூர் நிறுவனங்கள், ஒரு புதிய செயல்திட்டத்தைப் பயன்படுத்தி, திறனார்களை வேலையில் சேர்த்து, ஆற்றலைப் பெருக்கி உலக சந்தைகளில் சிறந்த முறையில் போட்டி போடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை 'சிங்கப்பூர் உலக மேலாளர்கள் செயல்திட்டம்' என்ற அந்தத் திட்டத்தைத் தொடங்கியது.
உலக அளவில் விரிவடையக் கூடிய நோக்கத்துடன் இருக்கும் உள்ளூர் நிறுவனங்கள், தங்கள் வளர்ச்சி நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஆற்றல் மேம்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவுவது அந்தச் செயல்திட்டத்தின் நோக்கம்.
புதிய செயல்திட்டத்திற்காக இப்போது ஆறு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 20 நிறுவனங்கள் வரை அதில் சேரும்.
மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங், செயல்திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
உள்ளூரில் வளர்ந்து உலக அளவில் போட்டியிடக்கூடிய மேலும் பல நிறுவனங்களை உருவாக்குவது நமது விருப்பம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இத்தகைய சிங்கப்பூரின் புதிய தலைமுறைத் தலைவர்கள் பொருளியலை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருப்பார்கள் என்றும் சிங்கப்பூரர்களுக்கு மதிப்புமிக்க வேலைகளை உருவாக்கித் தருபவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

