பூசைகளில் பயன்படுத்தும் நெய்யிலிருந்து விருந்தில் படைக்கும் பால் பாயசம்வரை இந்து திருமணங்களின் பல அங்கங்களில் விலங்கு தொடர்பான பொருள்களைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதிலிருந்து மாறுபட்டு 'வீகனிஸம்' எனப்படும் நனி (சுத்த) சைவ வாழ்க்கைமுறையை ஐந்தாண்டு
களுக்கு முன்னர் தேர்ந்தெடுத்தார் திருமதி மங்களரூபினி லட்சு
மணன், 33. அசைவப் பொருள்கள் மட்டுமின்றி, விலங்குவதை சார்ந்த எந்தப் பொருளும் இல்லாத விழா வாக தனது திருமணம் நடைபெற வேண்டுமென விருப்பப்பட்டார் இவர்.
உற்றார் உறவினர்கள் எதிர்த்து, ஏளனம் செய்தாலும் திருமதி மங்களரூபினியின் எண்ணத்துக்கு ஆதரவளித்தார் இவரது திருமணத்தை நடத்திய புரோகிதர்.
நனி சைவ உணவு, பருத்திப் (காட்டன்) புடவை ஆகியன இருந் தாலும் கோமாதா பூசைக்குத் தேவைப்படும் பசும்பாலும் பசுநெய்யும் இன்றி திருமணத்தை நடத்த முடியாது என்று பலர் கூறியிருந்தனர். ஆனால், தனது வேண்டுதலுக்கு இணங்கி, சோயா பால், கலப்படமில்லாத தூய கற்பூரம், பூசை எண்ணெய், டால்டா ஆகியவற்றைப் புரோகிதர் பயன்படுத்தி யதாக இவர் கூறினார்.
புதுமணப்பெண்களுக்கு பட்டு உடுத்துவதே உகந்தது என்று பலரும் கூறக் கேட்டிருந்தார் திருமதி மங்களரூபினி. அதில் உடன்பாடு இல்லாத இவர், பட்டுப்புடவைபோலக் காட்சியளிக்கும் பருத்திப் புடவை யையே திருமணத்தில் அணிந்திருந்தார். ஆடையில் மட்டுமின்றி, முக ஒப்பனையிலும்கூட விலங்கு வதையில்லாத பொருள்கள் பயன்
படுத்தப்படுவதை உறுதிசெய்திருந்தார் இந்தப் புரட்சிப் பெண்.
நனி சைவத்தை எதிர்த்திருந்தோரும்கூட, திருமணத்தன்று வழங்கப்பட்ட தேங்காய்ப் பால் பாயசத்தை சுவைத்தனர் என்றார் திருமதி மங்களரூபினி.
"திருமணத்தை முழுக்க முழுக்க 'வீகன்' முறையில் செய்வதை பலர் ஆதரிக்கவில்லை என்றாலும் எனது கணவர் கபிலன் கைகொடுத்தார். இந்த நனி சைவ முறை நமது பண்பாட்டை அவமதிப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
"நமது மகிழ்ச்சிக்காக பிற உயிர்களை வதைக்கலாம் என நமது பண்பாடு சொல்லவில்லை. அதனால், நம்பிக்கையுடனும் மனஉறுதி யுடனும் திருமண ஏற்பாடுகளை செய்தேன்," என்றார் திருமதி மங்களரூபினி.
தேடித் தேடி, ஒவ்வொரு பொருளையும் நனி சைவமென உறுதிசெய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்வதற்கு அதிக செலவாகும் என தோன்றலாம். ஆனால், தமது திருமணம் 10,000 வெள்ளிக்குள் நடந்தேறியதாகப் பகிர்ந்துகொண்ட திருமதி மங்களரூபினி, நெய்யும் பட்டும் இல்லாதது பெரிய அளவில் செலவைக் குறைத்ததாகக் கூறினார்.
முதன்முதலில் நனி சைவ வாழ்க்கை முறைக்கு மாற எண்ணிய இவருக்கு உணவுப் பழக்கங்களை மாற்றுவதே முதல் படியாக இருந்தது. படிப்படியாக சைவமற்ற உணவு வகைகளை புறந்தள்ளிய இவருக்கு, கடைசி சவாலாக இருந்தது பாலாடைக் கட்டி. அதையும் வென்ற இவர், கிட்டத்தட்ட விலங்கு சார்ந்த எல்லாப் பொருள்களுக்கும் தகுந்த மாற்றுத் தெரிவுகள் இருப்பதை தெரிந்துகொண்டார்.
நனி சைவமுறையிலும் சுவையான பலகாரங்கள் செய்யலாம் என்பதை நிரூபிக்க, இவ்வாண்டு, இணையச் சிற்றுண்டி உணவகம் ஒன்றை பகுதிநேரமாகத் தொடங்கினார் திருமதி மங்களரூபினி. பலவகையான கேக், ரொட்டி வகைகளை மாற்று உணவுப்பொருள்களுடன் தயாரித்து விற்றுவரும் இவர், சமையல் பொருள்களின் பின்ன ணியில் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டாலே போதும், சுவையில் மாற்றமின்றி அவற்றை நனி சைவமாக மாற்றிவிடலாம் என்கிறார்.
இவரது வாழ்க்கைமுறையைக் கண்டு வியந்த இவரின் தாயார் திருமதி சரஸ்வதியும் நான்கு ஆண்டு
களாக நனி சைவமுறைக்கு மாறியுள்ளார்.
நனி சைவ தமிழர் சாப்பாட்டை விற்கும் இணையக்கடை ஒன்றையும் திருமதி மங்களரூபினி இவ்வாண்டு தொடங்கியுள்ளார்.
"ஒவ்வொரு முடிவின் பின்னணியிலும் ஏதோ ஒரு வகையில் நாம் ஏதோ ஒரு ஜீவனை பாதிக்கிறோம் என்ற புரிதலைக் கொண்டுவருகிறது நனி சைவ வாழ்க்கைமுறை. அர்த்தமுள்ள விதத்தில் வாழ்க்கையை வழி
நடத்த இது உதவியுள்ளது," என்றார் இந்தப் பெண்.

