சாங்கி விமான நிலையத்திற்கு ஒரு வாரத்தில் ஏறக்குறைய ஒரு மில்லியன் பயணிகள் வந்து செல்கின்றனர். கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததில் இது கிட்டத்தட்ட 75 விழுக்காடு என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு மட்டும் அதன் எல்லைகளை மீண்டும் திறந்தபோது இருந்ததைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல்.
கூடுதல் பயணிகளைச் சமாளிக்கத் தேவையான அளவு சாங்கி விமான நிலையம் தயார்நிலையில் இருப்பதாக அமைச்சர் ஃபேஸ்புக்கில் நேற்று குறிப்பிட்டார்.
செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நான்காம் முனையமும் அக்டோபர் 11ஆம் தேதி இரண்டாம் முனையத்தின் தென்பகுதியும் மீண்டும் திறக்கப்பட்டதை அவர் சுட்டினார்.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 23.6 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளனர். இவர்களில் 3.69 மில்லியன் பேர் அக்டோபர் மாதத்தில் பயணம் செய்தவர்கள்.
இம்மாதத்தின் முதல் வார நிலவரப்படி சாங்கி விமான நிலையத்தில் 95 விமான நிறுவனங்கள் 5,500க்கு மேற்பட்ட விமானச் சேவைகளை வழங்கின.
சிங்கப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 140 நகரங்களுக்கு அவை சேவை வழங்கியதாகக் குழுமம் கூறியது.
ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகமானோர் பயணம் செய்தனர். வட அமெரிக்கா, தெற்காசியா, ஐரோப்பா ஆகியவற்றுக்கான பயணிகள் எண்ணிக்கை மிக வலுவாக மீட்சி கண்டதாகக் கூறப்பட்டது.
சொல்லப்போனால் கொவிட்-19 காலகட்டத்திற்கு முன்பிருந்ததைவிட அதிகமானோர் வட அமெரிக்காவுக்கு இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
தெற்காசிய வட்டாரத்தில் பழைய விமானச் சேவைத் தடங்கள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கியதுடன் புதிதாக இம்மாதம் 2ஆம் தேதி இந்தியாவின் புனே நகருக்கு சிங்கப்பூரில் இருந்து விமானச் சேவை தொடங்கியது.
ஐரோப்பாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானச் சேவைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையை எட்டியிருப்பதாகக் குழுமம் தெரிவித்தது.

