சிங்கப்பூரில் ஆய்வு அடிப்படையிலான முதுநிலைப் பட்டக் கல்வித் திட்டங்களில் பெரும்பாலானவற்றுக்குத் தொடர்ந்து மானியம் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆய்வுத் துறையில் மனிதவளத்தை உயர்த்துவது இதன் நோக்கம். தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலும் பட்ட மேற்கல்விக்கு அரசாங்க நிதியுதவி வழங்கப்படுவதில்லை என்று அது குறிப்பிட்டது.
பொது நிர்வாகம், பொதுச் சுகாதாரம், கட்டடக்கலை போன்ற துறைகளில் முதுநிலைக் கல்விக்கு அமைச்சு நிதியாதரவு வழங்கக்கூடும்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் அதன் பட்ட மேற்படிப்புக்கான ஏட்டுக் கல்வித் திட்டங்களில் பெரும்பாலானவற்றிற்கு 2024ஆம் ஆண்டு முதல் நிதியாதரவு வழங்கப்படமாட்டாது என்று அறிவித்ததையடுத்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குக் கல்வி அமைச்சு பதிலளித்தது.
ஏட்டுக் கல்வித் திட்டங்கள் ஆய்வுக் கல்வியில் இருந்து வேறுபட்டவை.
தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு வேலைக்குத் தயாராகும் நோக்கில் முதல் பட்டக் கல்விக்கு நிதியாதரவு வழங்கப்படுவதை அமைச்சு சுட்டியது.
நிரந்தரவாசிகளுக்கான நிதியாதரவு 2019ல் குறைக்கப்பட்டது. அனைத்துலக மாணவர்களுக்கு மானியம் ஏதும் கிடையாது என்பதால் அவர்கள் முழுக் கட்டணத்தையும் செலுத்துவர்.

