தேவாலயங்கள், கோயில்கள் போன்ற சமய அறப்பணி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வித் துறை அமைப்புகள் ஆகியவற்றுக்குக் கிடைத்த நன்கொடைகள் 2020ஆம் ஆண்டில் குறைந்துள்ளன.
சமயக் குழுமங்களுக்கான நன்கொடைகள் 2019வது நிதி ஆண்டில் $1.34 பில்லியனாக இருந்தன. இவை அடுத்த ஆண்டில் 13% குறைந்து $1.17 பில்லியனாக இறங்கின.
அதேவேளையில், கல்வி நிறுவனங்களுக்கான நன்கொடைகள் அதே காலகட்டத்தில் $483.7 மில்லியனில் இருந்து 13% குறைந்து $418.5 மில்லியனாக இருந்தன.
சமூக, நல்வாழ்வு, சுகாதாரம், சமுதாயம் போன்ற இதர துறைகளைப் பொறுத்தவரை நன்கொடைகள் 2020வது நிதி ஆண்டில் கூடின. என்றாலும்கூட 2020 நிதி ஆண்டில் எல்லா அறப்பணி அமைப்புகளுக்கும் கிடைத்த $3.12 பில்லியன் நன்கொடைகளில் 37% சமய அறப்பணி அமைப்புகளுக்கே சென்றன.
இந்த விவரங்கள் அறப்பணி அமைப்புகள் ஆணையர் நவம்பர் மாத முடிவில் வெளியிட்ட 2021 வருடாந்திர அறிக்கையிலுள்ளன.

