வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு சிங்கப்பூர் திரும்புகையில் மின்சிகரெட், சுவிங்கம் ஆகியவற்றைக் கொண்டுவரக் கூடாது என்பது தெரிந்தவைதான்.
அதேபோல, சிங்கப்பூர் திரும்புவோர் எந்த அளவுக்கு எவை எவற்றை கொண்டு வரலாம், எவை எவற்றை கொண்டுவர முடியாது என்பவற்றைத் தெரிந்துவைத்துக் கொள்வது நல்லது.
நீங்கள் மலேசியா தவிர இதர நாடுகளில் 48 மணி நேரத்திற்கு மேல் தங்கிவிட்டு திரும்பினால், தீர்வை செலுத்தாமல் பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி போன்ற 2 லிட்டர் மதுபானத்தை எடுத்து வரலாம்.
மேல் விவரங்களை str.sg/wCFP என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம். Customs@SG Web என்ற செயலியில் ஏற்கெனவே பணத்தைச் செலுத்திவிட்டு 10 லிட்டர் மதுபானத்தையும் எடுத்து வரலாம். 14% ஆல்கஹால் கலந்து இருக்கும் ஒரு லிட்டர் ஒயின் போத்தலை எடுத்துவர நீங்கள் $12.32 தீர்வைச் செலுத்த வேண்டி இருக்கும்.மேல் விவரங்களுக்கு str.sg/wCFm இந்த முகவரியை அணுகலாம்.
அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும்போது ஒவ்வொருவரும் 5 கிலோ இறைச்சி பொருள்களைக் கொண்டுவர முடியும். இதில் சமைத்த இறைச்சியும் அடங்கும். மேல் விவரங்களை str.sg/wCFs என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற நாடுகளில் இருந்து சுட்ட இனிப்பு இறைச்சியை எடுத்து வரமுடியாது. உயிரோடு அல்லது குளிரூட்டப்பட்ட சிப்பிகளை, அங்கீகரிக்கப்பட்ட எட்டு நாடுகளில் ஏதாவது ஒன்றிலிருந்து மட்டும்தான் நீங்கள் கொண்டுவர முடியும். மொத்தம் 5 கிலோ கடல் உணவுப் பொருள்களைக் கொண்டு வரலாம்.
அதில் சமைத்த நண்டு இறைச்சி, குளிரூட்டப்பட்ட சமைத்த இறால் இறைச்சி கூடினபட்சம் 2 கிலோ வரைதான் இருக்க முடியும்.
இவற்றை எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் கொண்டு வரலாம். விவரங்களுக்கு str.sg/wCFs முகவரியை நாடவும். ஒருவர் 30 கோழி முட்டைகளை மேற்கு மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் எடுத்து வரலாம். (str.sg/wCFs).
பழம், காய்கறிகளைப் பொறுத்தவரை சிங்கப்பூர் உணவு முகவை அங்கீகரிக்கும் அளவுக்கு கையில் எடுத்துவரக்கூடிய ஒரு பை அல்லது பெட்டி அளவுக்கு எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் கொண்டு வரலாம்.
பாலாடை, தின்பண்டங்கள், பால்மாவு எல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் உள்ளடங்கும். கூடினபட்சமாக 5 கிலோ அல்லது 5 லிட்டர் எடுத்து வரலாம். ஆனால் அவற்றின் மதிப்பு $100ஐ தாண்டக்கூடாது. பேர்ட்ஸ் நெஸ்ட் ஊட்டச்சத்து (bird's nest) ஒரு கிலோ கொண்டு வரலாம்.
நீங்கள் 48 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக வெளிநாடுகளில் தங்கி இருந்துவிட்டு வந்தால், உங்களுக்கு $500 ஜிஎஸ்டி நிவாரண வரம்பு உண்டு. 48 மணி நேரம் அல்லது அதற்குக் குறைவாக தங்கியிருந்துவிட்டு வந்தால் இந்த நிவாரணம் $100. இந்த மதிப்பிற்கு மேலாக கொண்டு வரும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டி இருக்கும்.
இரண்டு வார காலம் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பும்போது $15,000 மதிப்புள்ள கைப்பையுடன் வருகிறீர்கள் என்றால், நீங்கள் $14,500 தொகைக்கு 7% ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டி இருக்கும். இந்த வரி வரும் ஜனவரி 1 முதல் 8% ஆகிறது.
வெளிநாட்டில் அந்தப் பையை வாங்கியபோது விற்பனை வரியைச் செலுத்தி இருந்தாலும் இங்கு அதை எடுத்து வரும்போது ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
பயணம் தொடர்பிலான மேல் தகவல்கள் விவரங்களைப் பெற str.sg/travel முகவரி உதவும்.