ரச்சனா வேலாயுதம்
மோனலிசா
இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வு எழுதிய 9,000 வழக்கநிலை ஏட்டுக்கல்வி பிரிவு மாணவர்களில் 99.5 விழுக்காட்டினரும் 4,414 வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களில் 98 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் வழக்கநிலை ஏட்டுக்கல்வி பிரிவிலிருந்து 78.4 விழுக்காட்டு மாணவர்கள் உயர்நிலை ஐந்திற்குச் செல்ல தகுதி பெற்றுள்ளனர். இதே பிரிவிலிருந்து 51.9 விழுக்காட்டு மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களுக்கு பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (ஜிசிஇ ‘ஓ’ நிலை) தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி பெற்றவர்களில், சமூக அக்கறை கொண்ட 16 வயது ஸ்ரீநிதா ஏஞ்சலும் ஒருவர். சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி மாணவியான ஸ்ரீநிதா இதற்கு முன், தமிழில் தேர்ச்சி பெற சிரமப்பட்டார். விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இத்தேர்வில் தமிழில் சிறப்பாக செய்துள்ளதாக ஸ்ரீநிதா கூறினார்.
சமூகத்தில் உள்ள முதியோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவ விரும்பும் ஸ்ரீநிதா சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் இளையர் தொண்டூழியராக இருந்துள்ளார். தமது சேவைகளுக்காகவும் தலைமைத்துவம், நற்பண்பு ஆகியவற்றுக்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். பள்ளியில் சட்டாம்பிள்ளையாக இருந்த இவர், வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவில் இருப்பதை ஒரு தடையாகக் கருதாமல் தமது குறிக்கோள்களை நோக்கி தொடர்ந்து பயணித்தார்.
மருத்துவத் துறையில் நோயாளி சேவைப் பிரிவு நிர்வாகியான தம்முடைய தாயின் பணி ஸ்ரீநிதாவை ஈர்த்தது. வருங்காலத்தில் தாதியாகப் பணியாற்ற முடிவு செய்தார். அவர் நினைத்தது போலவே தேர்வு முடிவுகளுக்கு முன்பாகவே தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தாதிமை படிப்புக்கு தகுதியும் பெற்றுள்ளார்.
அடுத்த மாதம் தாதிமை படிப்பை மேற்கொள்ளவிருக்கும் இவர், தம்முடைய தாத்தா, பாட்டியை கவனித்துக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
கல்வி, குடும்பம், பள்ளிப் பொறுப்பு களைச் சமாளிக்க சிரமப்பட்டபோது மன உளைச்சலை ஆற்றும் மருந்தாக அவருக்கு இருந்தது பியானோ இசைக் கருவி.
இசை மீதான ஆர்வத்தினால், சுயமாக பியானோவை ஸ்ரீநிதா கற்றுக்கொண்டார்.
ஒற்றை தாயார் வளர்ப்பில் வளர்ந்த இம்டியாஸ் அஹமத், ஆரம்பத்தில் கல்வியில் அதிக ஈடுபாடு இல்லாமல் தடுமாறினார். குவீன்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த இம்டியாஸ், தமது நண்பர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் ஆகியோரின் ஊக்குவிப்பால் மெல்ல கல்வியின்மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.
குடும்ப சூழ்நிலையையும் தாண்டி ஜிசிஇ வழக்கநிலைத் தேர்வில் இன்று இம்டியாஸ் சிறப்பாக தேர்ச்சி பெற்றிருக்கிறார். தொண்டூழியப் பணிகளுக்காக விருதுகளைப் பெற்ற இவர் இணையப்பாதுகாப்பு நிபுணராக ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்.
பருமனான உடலாலும் தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் வழக்கநிலையில் தேர்ச்சி பெற்றதாலும் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது தன்னம்பிக்கையை இழந்தார் திலோத்தமா டூலி போஸ்.
ஆனால் அதுவே தமது வளர்ச்சிக்குத் தடையானபோது தமது மனத் தடைகளை தூக்கி எறிந்துவிட்டு கல்வியில் அக்கறை காட்டத் தொடங்கினார் திலோத்தமா. அதற்குப் பலனாகக் கிடைத்தது நல்ல தேர்ச்சி. மெரிடியன் உயர்நிலைப்பள்ளி மாணவியான இவர், அடுத்தவருடன் தம்மை ஒப்பிட்டுப் பார்த்தல் தேவையற்றது என்பதை உணர்ந்துள்ளார்.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் ேசர்ந்த 16 வயதான மகேஸ்வரன் ராஜேஷ்பாபு விடுமுறை நாள்களில் பகுதிநேரமாக விரைவு உணவகங்களில் பணிபுரிவார்.
குடும்பப் பொருளாதார சூழ்நிலையை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ளும் இவர், இவ்வாண்டின் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சிராங்கூன் கார்டன் உயர்நிலைப்பள்ளி மாணவரான இவர், இப்பள்ளியில் சேர்ந்தபோது தன்னம்பிக்கையில்லாமலும் மிகுந்த கூச்ச சுபாவம் உடைய மாணவராகவும் இருந்ததாகக் கூறினார்.
ஆசிரியர்களும் நண்பர்களும் குடும்பமும் அளித்த ஊக்கத்தில் பல்வேறு தலைமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மகேஸ்வரன்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பேக்கிங் துறையில் சேர்ந்து மகேஸ்வரன் படிக்கவுள்ளார்.