எம்ஆர்டி நிலையங்களில் எரிசக்தி நுகர்வைக் குறைக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான சோதனை நிலத்தடியில் உள்ள இரு எம்ஆர்டி நிலையங்களில் நடத்தப்படுகிறது.
வெப்பநிலையை குளிராக வைத்திருக்கும் நிலையில் எரிசக்தியின் பயன்பாட்டை எப்படிக் குறைக்கலாம் என்பதற்கான சோதனை பாய லேபார், மெக்பர்சன் எம்ஆர்டி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'என்விஷன் டிஜிட்டல்' என்னும் கரிமக் குறைப்பு மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து எஸ்எம்ஆர்டி நிறுவனம் இந்த மூன்று மாத சோதனையை இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கியது.
வட்டப்பாதை ரயில் தடத்தில் அமைந்துள்ள இந்த எம்ஆர்டி இரு நிலையங்களிலும் எரிசக்திப் பயன்பாட்டை 5 முதல் 10 விழுக்காடு வரை குறைப்பது சோதனையின் நோக்கம்.
இந்தச் சோதனை வெற்றியைத் தந்தால், தீவு முழுவதும் உள்ள 70 நிலத்தடி நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு முறை நிறுவப்படும்.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப்பாதை மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய ரயில் தடங்களில் இந்த நிலையங்கள் அமைந்துள்ளன.
இந்த எம்ஆர்டி நிலையங்களில் ஆண்டுக்கு 7,000 மெகாவாட் மணிநேரங்களைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு உதவும். இவ்வாறு மிச்சப்படும் எரிசக்தி, 1,500 நான்கறை வீவக வீடுகளுக்கு ஓராண்டுக்குப் பயன்படுத்தக்கூடிய அளவோடு ஒத்திருக்கும்.
வானிலை நிலவரம், பயணி
களின் எண்ணிக்கை ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி, அடுத்த மணி நேரத்தில் ரயில் நிலையத்தில் வெளியாகக்கூடிய வெப்பத்தின் அளவை செயற்கை நுண்ணறிவு கணிக்கும்.
பின்னர், அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் குளிரூட்டியின் அளவு தாமாக மாற்றி அமைக்கப்படும். தேவையான 26 டிகிரி சென்ட்டிகிரேட்டில் குளிரூட்டியை வைப்பதன் மூலம் சரியான எரிசக்திப் பயன்பாடு சாத்தியமாகும்.
ஒரு எம்ஆர்டி நிலையத்தைக் குளிரூட்டுவதற்குத் தேவையான எரிசக்தியைக் காட்டிலும் அதிகமாகப் பயன்படாதவாறு தானாக மாற்றும் முறையால் பராமரிப்பு நேரமும் மிச்சப்படும்.
செயற்கை நுண்ணறிவு சோதனை முறையின் தொடக்க நிகழ்வில் பேசிய எம்ஆர்டி டிரெய்ன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு லாம் ஷீ காய், எம்ஆர்டி ரயில்களே சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்தின் ஆகச் சிறந்த பசுமை முறையைப் பின்பற்றக்கூடியவை என்றும் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைக்க பசுமை முயற்சிகளை எஸ்எம்ஆர்டி நிர்வாகம் விரிவாக்கம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

