சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான போரில் நேரடியாகப் பங்களித்தோரை அங்கீகரிக்கும் தேசிய அளவிலான சிறப்பு விருதுகள் குறித்த மேல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக, கொவிட்-19 மீள்திறன் பதக்கம், சான்றிதழ் ஆகிய அங்கீகாரங்கள் குறித்து இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்த்திய தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
கிருமிப் பரவலுக்கு எதிரான சிங்கப்பூரின் தீவிர நடவடிக்கைக்குப் பங்களித்த குழுவிற்கு சான்றிதழ் வழங்கப்படக்கூடும் என்றும் பதக்கம் இதன் தொடர்பில் சிறப்பாகச் செயல்பட்ட தனிநபருக்கு வழங்கப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பதக்கத்தின் வடிவம் முதன்முதலாக நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிடப்பட்டது
வெள்ளியாலான பதக்கத்தின் நடுவில் உள்ள வட்டத்தைச் சுற்றி அதை நோக்கிய எட்டு அம்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பதக்கத்தின் முன்பக்கம் பிறை நிலவும் ஐந்து நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் 'கொவிட்-19', 'மீள்திறன் பதக்கம்' எனும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பதக்கத்தின் பின்பக்கம் நாட்டின் சின்னமும் அதைச் சுற்றிலும் 'எஸ் ஜி யுனைடெட்', 'ஸ்ட்ராங்கர் டுகேதர்' எனும் சொற்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
தனித்துவமான முறையில் பங்களித்தோருக்கு தற்போது வழங்கப்படும் பாராட்டுப் பதக்கம், பொதுச் சேவைப் பதக்கம்,
பொது நிர்வாகப் பதக்கம் போன்றவற்றில் கொவிட்-19 என்ற வார்த்தையும் சேர்த்துப் பொறிக்கப்பட்டு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
கொவிட்-19 மீள்திறனுக்குப் பங்களித்தோருக்கான அனைத்து விருதுகளும் நாடா ஒன்றில் இணைக்கப்பட்டிருக்கும்.
அதன் நடுவில் மெல்லிய சிவப்புக் கோடும் அதன் இரு பக்கமும் ஆங்கிலத்தில் 'டர்க்காய்ஸ்' எனப்படும் பசுமை கலந்த நீல நிறம் வெளிராகவும் தொடர்ந்து அடர்த்தியாகவும் இடம்பெற்றிருக்கும்.
முன்னதாக தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ, இரு சிவப்புக் கோடுகள் கொவிட்-19 கிருமிக்கான 'ஏஆர்டி' விரைவுப் பரிசோதனையில் தெரியக்கூடிய இரண்டு சிவப்புக் கோடுகளைக் குறிப்பதாக இருக்கும் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
கிருமிப் பரவலுக்கு எதிரான போரில் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள், பொதுச் சேவை அதிகாரிகள், அரசு சாரா அமைப்புகள், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட தனி நபர்கள் எனப் பலரும் பங்களித்ததைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
இவர்களில் ஓய்வு பெற்ற பிறகும் தொண்டூழிய அடிப்படையில் பங்களிக்க முன்வந்தோரும் அடங்குவர். விருதுக்குரியோர் இந்த ஆண்டிறுதியில் அறிவிக்கப்படுவர் என்றும் அடுத்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.

