சாங்கி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் தங்கள் பயணப் பைகளின் தடமறியும் சேவையைப் பயன்படுத்த இயலும்.
இம்மாதம் 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புச் சேவை இதனைச் சாத்தியமாக்குகிறது.
முதற்கட்டமாக 35 விமான நிறுவனங்களின் பயணிகளுக்கு மட்டும் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஃபின் ஏர், ஜெட்ஸ்டார் ஏஷியா, ஏர் இந்தியா போன்றவை இவற்றில் சில.
இவ்விமான நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி சாங்கி இரண்டாம் மூன்றாம் முனையங்களில் இருந்து கிளம்பும் பயணிகளும் இங்கு வரும் அல்லது இடைவழி மாறும் பயணிகளும் இச்சேவையைப் பயன்படுத்த முடியும்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் விமானப் போக்குவரத்துத் துறை உலகளாவிய நிலையில் கடுமையான ஆள்பற்றாக்குறையைச் சந்தித்தது. இதனால் பயணப் பைகள் வந்து சேர்வதில் தாமதம், அவை காணாமற்போதல், விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுதல் எனப் பயணிகள் பலவகை இன்னல்களுக்கு ஆளாயினர்.
இவ்வேளையில் சாங்கி விமான நிலையக் குழுமம் அறிமுகம் செய்யும் இப்புதிய சேவை பயணிகள் தங்கள் பயணப் பைகளின் நிலவரம் குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது.
மோசமான வானிலையால் பயணப் பைகள் வந்துசேர்வது தாமதமானால் பயணிகள் அதுகுறித்த அண்மைத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இது கைகொடுக்கிறது.
ஊழியர்களுக்கு இடையே முதலில் சோதிக்கப்பட்ட பிறகு இப்போது பயணிகளிடம் இரண்டாம் கட்டமாகச் சோதிக்கப்படும் இந்தச் சேவையை 'ஐசாங்கி' செயலியின் வாயிலாகப் பயன்படுத்தலாம்.
சாங்கி விமான நிலையத்தின் முதல் மற்றும் நான்காம் முனையங்களில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் இங்கு வரும் பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்த இயலும். படிப்படியாக இச்சேவையைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
பயணத்தின்போது தங்கள் பயணப் பைகள் எங்கு இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதன் மூலம் பயணிகள் நிம்மதியாகப் பயணம் மேற்கொள்ள உதவுவதே நோக்கம் என்று குழுமம் கூறியது.
பயணப் பைகளின் தடமறியும் சேவையை ஏற்கெனவே டெல்டா ஏர்லைன்ஸ், கொரியன் ஏர் போன்ற விமான நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. இருப்பினும் தென்கிழக்காசியாவில் முதலாவதாக இங்குதான் இச்சேவை வழங்கப்படுகிறது என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
பங்கேற்கும் விமான நிறுவனங்களின் முழுப்பட்டியலைத் தெரிந்துகொள்ள குழுமத்தின் இணையத்தளத்தை நாடலாம்.

