ஆண்ட்ரூ கோஸ்லிங் எனும் 50 வயது ஆடவர் கூட்டுரிமை வீட்டின் ஏழாம் மாடியில் இருந்து 'ஒயின்' போத்தலை வீசியெறிந்ததில் நசியாரி சுனி எனும் 73 வயது முதியவர் மாண்டார்.
ஆஸ்திரேலியரான கோஸ்லிங் கூட்டுரிமை வீட்டு வளாகத்திற்குள் 'பார்பகியூ' முறையில் விருந்து உண்ணக் கூடியிருந்த மலாய் முஸ்லிம்கள்மீது போத்தலை வீசினார். அது முதியவரின் தலையில் விழுந்து பின்னர் அவரது 69 வயது மனைவி நசிமா சிட்ரியின் தோள்பட்டையில் காயம் ஏற்படுத்தியது.
சம்பவம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஸ்பாட்டிஸ்வூட் ரோட்டில் உள்ள ஸ்பாட்டிஸ்வூட் 18 எனும் கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் நடந்தது.
மரணம் விளைவிக்கும் வகையில் போத்தலை வீசியது, மூதாட்டிக்குக் காயம் ஏற்படுத்தியது ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளை இவ்வாண்டு பிப்ரவரியில் கோஸ்லிங் ஒப்புக்கொண்டார்.
அதையடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கோஸ்லிங்கின் நடவடிக்கை முஸ்லிம்கள்மீதான வெறுப்பை வெளிப்படுத்தியதாகவும் சமய அடிப்படையிலான மோசமான செயல் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர்.
அதனையடுத்து கோஸ்லிங் மேல்முறையீடு செய்தார். யோசிக்காமல் செய்த செயலால் மரணம் ஏற்படுமாயின் அதற்கு அதிகபட்சமாக ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை மட்டுமே விதிக்க முடியும் என்பதை அவரது வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் நன்கு ஆராய்ந்த பிறகு கோஸ்லிங்கின் தண்டனையை ஆறு மாதம் குறைத்து ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையாக நீதிபதி நேற்று அறிவித்தார்.

