தேவைக்கேற்பக் கட்டித் தரப்படும் (பிடிஓ) வீடுகளில் குறைந்தது மூன்று வீடுகள் சொத்து இணையத்தளங்களில் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவ்வீடுகள் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அவற்றில் இதற்குமுன் எவரும் வசித்ததுபோல் தெரியவில்லை என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
பிடிஓ வீடுகளை வாங்குவோர் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு அவ்வீட்டில் கட்டாயம் குடியிருக்க வேண்டும் என்பது வீடமைப்பு வளர்ச்சிக் கழக விதிமுறை.
ஐந்தாண்டுக் காலத்திற்குள் குடியேறாமல், மீண்டும் புத்தம் புதிய வீடாக மறுவிற்பனைச் சந்தையில் விற்கும் நோக்கில் பிடிஓ வீடுகளை வாங்க முடியாது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கடந்த திங்கட்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
உரிமையாளர்கள் குறைந்தபட்ச குடியிருப்புக் காலத்தை நிறைவேற்ற முடியாவிடில், அவ்வீடு கழகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதன்பின் அவ்வீடு எஞ்சிய வீடுகளுக்கான விற்பனை நடவடிக்கையில் சேர்க்கப்படும் என்றும் திரு லீ அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"அப்படி இல்லையெனில், வீவக விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படலாம். அதன் தொடர்பில் வீவக விசாரிக்கும்," என்றும் அவர் கூறியிருந்தார்.
'புராப்பர்ட்டிகுரு' இணையத் தளத்தில் அத்தகைய மூன்று வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டு இருந்ததைக் காண முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
காலியாகவுள்ள பிடிஓ வீடுகள் மறுவிற்பனைச் சந்தைக்கு வருவது குறைவுதான் என்று சொத்துச் சந்தை முகவர்கள் கூறியதாக அச்செய்தி தெரிவித்தது.
"முற்றிலும் காலியாகவிருக்கும் வீட்டைப் பார்ப்பது அரிதுதான். கிட்டத்தட்ட நூற்றில் ஒரு வீட்டையே அப்படிப் பார்க்கலாம். வாழ்க்கைத்துணையை இழந்தோர் அல்லது அவ்வீட்டில் பேய் இருப்பதாகக் கருதி, அதில் குடிபுக மறுப்போர் போன்றோர் அதற்குக் காரணமாக இருக்கலாம்," என்று ஆரஞ்ச்டீ அண்ட் டை நிறுவனச் சொத்து முகவர் சூசன் மரியம் கூறினார்.

