சிங்கப்பூருக்கு வரும் விமானப் பயணிகள் 'எஸ்ஜி' வருகை அட்டையைச் சமர்ப்பிக்கத் தவறினால் குடிநுழைவு நடைமுறையில் தாமதத்தை எதிர்கொள்ள நேரிடும்.
குடிநுழைவுச் சோதனை முகப்புக்கு வருமுன்னர் விவரங்களைச் சமர்ப்பிக்காதவர்கள், அட்டையைச் சமர்ப்பித்துவிட்டு பின்னர் மீண்டும் வரிசையில் சேர்ந்துகொள்ள வேண்டும்.
சிங்கப்பூர்வாசிகள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளுக்கும் இது பொருந்தும்.
வீண் தாமதத்தைத் தவிர்க்க, பயணத்துக்கு மூன்று நாள்கள் முன்பே குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தின் இணையத்தளம் அல்லது 'மைஐசிஏ' செயலி மூலம் விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி ஆணையம் நினைவூட்டிஉள்ளது.
சிங்கப்பூர்வாசிகளுக்கு இதற்கு மூன்று நிமிடங்களுக்குக் குறைவான நேரமே தேவைப்படும். வெளி நாட்டினருக்கு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் பிடிக்கும்.
கொவிட்-19 கிருமிப் பரவலை முன்னிட்டு மூடப்பட்டிருந்த எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும்வேளையில் ஆணையத்தின் நினைவூட்டல் வெளிவந்துள்ளது.
முன்னதாக, இணையத்தில் 'எஸ்ஜி' வருகை அட்டையைச் சமர்ப்பிக்கும் முறை காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2020 மார்ச் மாதத்தில் அதில் மின்வடிவிலான சுகாதார அறிவிப்பு அம்சம் சேர்க்கப்பட்டது.
இவ்வேளையில் வருகை அட்டையைச் சமர்ப்பிக்க பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் சில இணையத்தளங்கள் குறித்து ஆணையம் நேற்று எச்சரித்துள்ளது. ஆணையத்தின் இணையத்தளம் அல்லது 'மைஐசிஏ' செயலியின் மூலம் இலவசமாக இந்த விவரங்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதை அது சுட்டியது.
'மைஐசிஏ' செயலியைப் பயன்படுத்தும்படி பயணிகளை ஆணையம் ஊக்குவித்தது. இச்செயலியில் ஒருமுறை தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டால் அடுத்தடுத்த பயணங்களுக்கு அவற்றைச் சேமிக்கும் வசதியும் உண்டு.
சிங்கப்பூர்வாசிகள் தங்கள் விவரங்களை ஆணையத்தின் தரவுத்தளத்தில் இருந்து தானியக்க முறையில் நிரப்பிக்கொள்ள இயலும்.
தரைவழி சோதனைச் சாவடிகளில் மட்டும் சிங்கப்பூர்வாசிகள் வருகை அட்டையைச் சமர்பிக்கத் தேவையில்லை.

