கடைசி நேரத்தில் பண்டிகைக்கான பொருள்களை வாங்குவோர், கூட்டமாகக் கொண்டாட விரும்புவோர் எனப் பலதரப்பினர் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவில் ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் கூடுவர்.
இத்தகையோர் கூட்ட நெரிசலைத் தவிர்க்க உதவும் மின்னிலக்க வரைபடத்தைப் பயன்படுத்தலாம். இவ்வரைபடம் கூட்ட நெரிசல் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதற்கேற்பத் திட்டமிட உதவும்.
மின்னிலக்க வரைபடத்தை https://go.gov.sg/crowd-at-orchard-road எனும் இணைய வாசலில் காணலாம். இது கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதிகளைக் கூறுவதோடு அவற்றுக்குப் பதில் வேறு எங்கு செல்லலாம் என்ற பரிந்துரைகளையும் வழங்கும்.
இணைய வாசலை இம்மாதம் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவுக்குப்பின் 1.30 மணி வரை பயன்படுத்த முடியும்.
கிறிஸ்துமசுக்கு முதல் நாள் இரவில் ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் கூட்ட நெரிசலை எதிர்பார்ப்பதாகக் காவல்துறை கூறியது.
அன்று ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டு டோபிகாட் அல்லது சாமர்செட் ரயில் நிலையத்திற்குச் செல்லும்படியும் பயணிகளை அது கேட்டுக்கொண்டது. கூட்ட நெரிசல் குறித்துத் தகவல் தரும் மின்னிலக்க வரைபடத்தை கணினி அல்லது கைத்தொலைபேசி வாயிலாகக் காணலாம்.
பொதுமக்கள் கூட்ட நெரிசலைக் கண்காணித்து அதற்கேற்ப திட்டமிட உதவும் இந்தத் தொழில்நுட்ப ஏற்பாடு இவ்வாண்டு தேசிய தினத்தன்றும் பயன்படுத்தப்பட்டது.
இது தவிர்த்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருப்பர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்புகளும் திசை காட்டும் குறிப்புகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும்.
பொதுமக்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படியும் வலிந்து கூட்டத்திற்குள் வழி ஏற்படுத்திச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நெரிசல் மிகுந்த இடங்களுக்கு அதிகமாக ரொக்கம் எடுத்துச் செல்லவேண்டாம் என்றும் அதிகமான நகைகளை அணியவேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.