மாதங்கி இளங்கோவன்
ஜாமியா இடைநிலை மறுவாழ்வு நிலையம் 14வது முறையாக அதன் 'புரொஜெக்ட் ஹாப்பினஸ்' திட்டத்தின்கீழ், கிறிஸ்துமஸை முன்னிட்டு திரு ராபர்ட் பேட்டிரிக் லாரன்ஸ், திருமதி ஆண்டனி ஜோசஃபின்
தம்பதியனரின் வீட்டை புதுப்பித்தது.
உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் புதுப்பித்த வீட்டை ஒப்
படைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டார். தம்பதியிரோடு மகிழ்ந்து பேசிய அவர், "சிங்கப்பூரில் இன, சமய ஒற்றுமையை இதுபோன்ற முயற்சிகள் வலுப்
படுத்த உதவுகின்றன என்றால் அது மிகையாகாது," என்றார்.
அவர் ஜாமியா இடைநிலை மறுவாழ்வு நிலையத்தின் தொண்டூழிய முயற்சிகளை மெச்சியதோடு தொடர்ந்து இதுபோல பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியளிக்க கேட்டுக் கொண்டார்.
வசதி குறைந்த குடும்பங்களின் வாழ்வில் ஒளியூட்ட வேண்டுமென்ற குறிக்கோளோடு 2019ஆம் ஆண்டில் ஆரம்பித்த இத்திட்டத்தினால் 14 குடும்பங்கள் உதவி பெற்றுள்ளன.
அவ்விதத்தில், திரு ராபர்ட்டின் வீட்டிற்கு ஜாமியா இடைநிலை மறுவாழ்வு நிலையத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் இஸ்லாகேரின் முன்னாள் உறுப்பினர்களும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்து அவருக்கும் அவரது மனைவிக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தனர்.
அவர்களுடைய இல்லத்தை மாற்றியமைப்பதற்கு ஜாமியா இடைநிலை மறுவாழ்வு நிலையம் ஆதரவாளர்களிடமிருந்தும் நன்கொடையாளர்களிடமிருந்தும் மொத்தம் $2,000 திரட்டியுள்ளது.
அத்தொகையைக் கொண்டு தொண்டூழியர்கள் நான்கு நாற்
காலிகள், இரண்டு மேசைகள், விளக்குகள் கொண்ட மின்விசிறி, விளக்குகள் ஆகியவற்றை வாங்கி வீட்டில் பொருத்தினர்.
அவர்கள் வீட்டுக்கு புது சாயமும் பூசினர். அனைத்து வீட்டுப் பணிகளும் ஐந்தே நாள்களில் செய்து முடிக்கப்பட்டன.
"எங்கள் வீட்டில் நடமாடுவதற்கு அவ்வளவு இடமில்லாத காரணத்தால் முன்பெல்லாம் உறவினர்
களையும் நண்பர்களையும் கிறிஸ்துமஸுக்கு அழைக்கும்போது அவர்களை சிறு சிறு குழுக்களாக வருமாறு கேட்டுக்கொள்வோம். இப்போது புதுப்பித்தலுக்கு பிறகு அதிக இடம் இருப்பதால் இவ்வாண்டு இன்னும் அதிகமானோரை அழைக்க ஆவலுடன் உள்ளேன்," என்றார் திருமதி ஜோசஃபின்.
திருமதி ஜோசபின் கடந்த 20 ஆண்டுகளாக உட்லண்ட்ஸ் அவன்யூ ஐந்து வட்டாரத்திலுள்ள மசெக பாலர் பள்ளி ஒன்றில் ஆதரவு பணிக்குழுவில் பணியாற்றி வருகிறார்.
தம் பள்ளி மாணவர்களுக்கு சமைத்து வரும் திருமதி ஜோசபின், ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் தம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் தம் மகன்
களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து சமைத்துக் கொடுப்பார்.
முன்பு பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்த திரு ராபர்ட், 74, உடல்
நலம் குன்றிய காரணத்தால் வேலையிலிருந்து விலக நேரிட்டது. ஆகையால்தான் அவரது மனைவி கடுமையாக உழைத்து வீட்டுச் செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார்.
"ஜாமியா எங்களுக்குச் செய்த உதவியை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். இவ்வாறு என் வீட்டைத் தேர்வு செய்து வீட்டை அழகுபடுத்தியது என் மனதை நெகிழச் செய்துள்ளது. ஜாமியாவின் இதுபோன்ற தொண்டூழிய வேலைகளினால் தொடர்ந்து பல குடும்பங்கள் மேன்மேலும் நன்மையடையும் என நம்புகின்றேன்," என்றார் திரு ராபர்ட்.

