தொடக்கநிலை இறுதித் தேர்வுக்குப் பிறகு முடிவுகள் கிடைத்ததும் தாங்கள் செல்ல விரும்பும் உயர்நிலைப்பள்ளிப் பட்டியலை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மொத்தம் ஆறு தெரிவுகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த ஆண்டில் தொடக்கநிலை இறுதித் தேர்வு எழுதிய மாணவர்களின் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்கு அவர்களது முதல் மூன்று தெரிவுகளில் ஏதேனும் ஒரு பள்ளி கிடைத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
தேர்வு எழுதிய மாணவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோருக்கு தங்களது ஆறு தெரிவுகளில் ஒன்று கிடைத்தது.
பள்ளியில் ஒரே ஒரு இடம் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர் இருந்தால் குடியுரிமை, அந்தப் பள்ளி அவர்
களது தெரிவுப் பட்டியலில் எத்தனையாவது இடத்தில் உள்ளது போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.
ஏறத்தாழ 10 விழுக்காடு மாணவர்களுக்கான உயர்நிலைப்பள்ளி கணினி மூலம் நடத்தப்பட்ட குலுக்கல் முறையின் வழி நிர்ணயிக்கப்பட்டது.
உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதலில் அவர்
களது முதல் தெரிவு வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆறு தெரிவுகளில் ஒரு பள்ளிக்கூடமும் கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் எதில் இடம் உள்ளதோ அதற்கு அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

