சனிக்கிழமைகளில் தடுப்பூசி நிலையங்கள் இயங்கும் நேரம் அண்மையில் நீட்டிக்கப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த நேர நீட்டிப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்கள் (ஜேடிவிசி), சிறாருக்கான தடுப்பூசி நிலையங்கள் ஆகியவை சனிக்கிழமைகளில் இயங்கும் நேரம் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நேர நீட்டிப்பு இம்மாத இறுதி வரை நடப்பில் இருக்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சனிக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்இந்த நேர நீட்டிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை மறுநாளிலிருந்து குறிப்பிட்ட சில பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களில் மட்டும் நோவாவேக்ஸ்/நோவாசோவிட் கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சு கூறியது.
தற்போது, அந்தத் தடுப்பூசி குறிப்பிட்ட சில பொதுச் சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களிலும் ஜூரோங், ஈசூன் பலதுறை மருந்தகங்களிலும் போடப்படுகிறது.
இம்மாதம் 24ஆம் தேதிக்குப் பிறகு இந்த வகை தடுப்பூசியை ஜூரோங், ஈசூன் பலதுறை மருந்தகங்களில் போட்டுக்கொள்ள முடியாது.
அடுத்த மாதம் 3ஆம் தேதியிலிருந்து ஜூரோங் பலதுறை மருந்தகத்தில் 12 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு இருவகைத் திறன்கொண்ட ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி தடுப்பூசி போடப்படும்.
ஈசூன் பலதுறை மருந்தகத்தில் ஆறு மாதக் குழந்தைகள் முதல் நான்கு வயது சிறுவர்கள் வரை மொடர்னா/ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
50 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யாமல் ஏதேனும் ஒரு ஜேடிவிசிக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

