அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாகக் கூடி வருகிறது. அதற்கு எதிராக மதிப்பு குறையாமல் மிக அதிக மீள்திறனுடன் திகழும் ஆசியாவின் நாணயமாக சிங்கப்பூர் வெள்ளி இருக்கிறது.
இருந்தாலும்கூட உலகளாவிய அளவில் பொருளியல் சூழ்நிலை அடுத்த ஆண்டில் மாறும் நிலையில், வளர்ச்சி கணிசமான அளவுக்கு மெதுவடையும். பணவீக்கம் உச்சத்துக்குச் சென்று பின்னர் குறையத் தொடங்கும்.
இந்த நிலையில், வட்டார நாடுகளின் நாணயங்கள் சிங்கப்பூர் நாணயத்தை விஞ்சி செயலாற்றும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இந்த ஆண்டில், இதுவரை நேற்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 0.3% மதிப்பு ஏறி இருந்தது.
நேற்று ஒரு டாலருக்கு 1.3481 வெள்ளியாக சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு இருந்தது. இது புதன்கிழமை நிலவிய சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பைவிட 0.24% அதிகம்.
அமெரிக்க டாலரின் மதிப்பு உலகம் முழுவதுமே எல்லா நாணயங்களையும் விட அதிகமாகக் கூடி இருக்கிறது.
அமெரிக்காவின் மத்திய வங்கி பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதத்தை ஏற்றிவிட்டது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு மிகவும் உயர்ந்து இருக்கிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு கூடியிருப்பதன் விளைவாக ஐரோப்பிய யூரோ, பிரிட்டனின் பவுண்ட் உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் நாணய மதிப்புகள் வீழ்ச்சி கண்டு இருக்கின்றன.
ஜப்பானின் யென் நாணய மதிப்பு இந்த ஆண்டில் இதுவரை 17.4% குறைந்து இருக்கிறது. சீன நாணயம், தென் கொரியா, தைவான் நாணயங்களின் மதிப்பு 7% முதல் 12% வரை இறங்கி இருக்கின்றன. மலேசிய ரிங்கிட் 6.2% வீழ்ச்சி கண்டுள்ளது.
இருந்தாலும் சிங்கப்பூர் நாணயம் வலுவான மீள்திறனுடன் திகழ்கிறது.
ஆசிய நாடுகளில் பெரும்பாலான நாடுகள் கொவிட்-19 கட்டுப்பாடுகளை அகற்றத் தொடங்கியதற்கு முன்பாகவே சிங்கப்பூர் அந்தக் கட்டுப்பாடுகளை அகற்ற முடிவு செய்தது.
இதனால் சிங்கப்பூர் பொருளியல் வலுவாக மீட்சியடைந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதியானது. இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூர் நாணய ஆணையம் எடுத்த கொள்கை முடிவுகளும் சிங்கப்பூர் வெள்ளியின் செயல்திறனுக்கு உறுதுணையாகத் திகழ்ந்தன.
வர்த்தக அடிப்படையில் பார்க்கையில், சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு 2021 அக்டோபரில் இருந்து சுமார் 7% உயர்ந்து இருப்பதாக பகுப்பாய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.
சிங்கப்பூரின் வர்த்தகப் பங்காளிகளாக உள்ள நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக அதிவேகமாக வலு கூடியுள்ள நாணயமாக சிங்கப்பூர் வெள்ளி திகழ்கிறது.
இந்நிலையில், பணவீக்கம் இன்னும் கொஞ்ச காலம் நீடிக்கும் என்றாலும் அது கூடிய விரைவில் உச்சத்தைத் தொட்டு பின் இறங்க தொடங்கிவிடும் என்று கணிக்கப்படுகிறது. இத்தகைய நிலையில், நாணயக் கொள்கைகள் மேலும் இறுக்கம் அடையாது என்று நம்பப்படுகிறது.
மத்திய வங்கிகள் வட்டிவிகித உயர்வை நிறுத்திவிடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விளைவாக அமெரிக்க டாலருக்கு எதிரான வட்டார நாணயங்களின் மதிப்பு உயரத் தொடங்கி இருக்கிறது.
தென் கொரியாவின் வோன் நாணயம் அக்டோபர் 1 முதல் டாலருக்கு எதிராக சுமார் 8% மதிப்பு கூடி இருக்கிறது. சிங்கப்பூர் வெள்ளியும் ஜப்பானிய யென்னும் இரண்டாவது நிலையில் இருக்கின்றன. இவை இரண்டும் சுமார் 5.2% மதிப்பு கூடி இருக்கின்றன.
மலேசிய ரிங்கிட், தைவான் டாலர், சீனாவின் சீன நாணயம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
வளர்ச்சி மெதுவடைகிறது. பணவீக்கம் உச்சத்தைத் தொட்டு பின்னர் இறங்கிவிடும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவருகின்றன. இந்தச் சூழ்நிலையில், சிங்கப்பூர் நாணய ஆணையம் கொள்கைகளை மேலும் இறுக்காது என்றே பகுப்பாய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இருந்தாலும்கூட ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையம் அடுத்த கூட்டத்தை நடத்தும்போது கொள்கைகள் மேலும் இறுக்கமடை யும் என்பதற்கான வாய்ப்புகளை அறவே மறுத்துவிட இயலாது என்றும் நம்பப்படுகிறது.

