மோனலிசா
ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலின் தலைவர் திரு ப. சிவராமன் (படம்) நேற்றுக் காலை காலமானார். அவருக்கு வயது 76.
இன்று மாலை அவரது நல்லுடல் தகனம் செய்யப்படுகிறது. அவர் தம் மனைவி, மகன், மகள், நான்கு பேரப் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை விட்டுச் செல்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் 1870ஆம் ஆண்டு வாட்டர்லூ ஸ்திரீட்டில் நிறுவப்பட்டது. 1935ஆம் ஆண்டு முதல் இக்கோயில் திரு சிவராமனின் தந்தையும் பிரபலமான சமூகத் தலைவர்களில் ஒருவரும் வள்ளலுமான திரு பக்கிரிசாமி பிள்ளையின் தலைமையில் இயங்கியது.
1984ஆம் ஆண்டு திரு பக்கிரிசாமி பிள்ளையின் மறைவைத் தொடர்ந்து, அவருடைய மகன் திரு சிவராமன் இக்கோயிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவரின் காலத்தில் இக்கோயிலில் 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை விரிவான சீரமைப்புப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1989ஆம் ஆண்டு இக்கோயில் பிரமாண்ட குடமுழுக்கும் கண்டது.
திருக்கோயில் பணிகளுக்கு அப்பால், திரு சிவராமன் தம்முடைய வாழ்நாளில் பல்வேறு சமூக தொண்டுகளையும் ஆற்றியுள்ளார்.
குறிப்பாக, 2012ஆம் ஆண்டில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் கல்வி உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உதவுகிறது.
"ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கும் மேலாக திரு பக்கிரிசாமிப் பிள்ளை பரம்பரை சிங்கப்பூருக்கு தொண்டாற்றி வருகின்றனர். அவ்வகையில் சிங்கப்பூரிலுள்ள இந்து கோயில்கள் அமைப்புகளுக்கு மூத்த தொண்டூழியராகவும் ஆலோசகராகவும் இருந்து வந்த இவருடைய இழப்பை ஈடுகட்ட இயலாது," என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார் இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜசேகர்.
"என்னுடைய 40 ஆண்டு கால நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். அமைதியான, எளிமையான சுபாவத்துடன் தன்னடக்கத்துடன் பழகக்கூடியவர். தன்னுடைய மொத்த வாழ்வையும் பொதுப்பணிக்காகவே அர்ப்பணித்தார்.
"இந்து கோயில்களின் நிர்வாகத்திலும் சமூகப் பணிகளிலும் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்து சென்றிருக்கிறார்," என்று கூறினார் இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் ராஜன் கிருஷ்ணன்.
'ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ்' எனப்படும் சமாதானத் தூதராகவும் பணியாற்றியுள்ள இவர், பல திருமணங்களை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.
மேலும் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய தின விருது விழாவில்பொதுச் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4.30 மணிக்கு 17, ஜலான் எலோக், சிங்கப்பூர் 229055 எனும் முகவரியிலுள்ள இவரின் இல்லத்திலிருந்து புறப்படும் திரு சிவராமனின் நல்லுடல், மண்டாய் தகனச்சாலை மண்டபம் 3ல் மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தார் தெரிவித்தனர்.

