மாதாந்திர வாழ்க்கைத்தொழில் உரிமம் விண்ணப்பங்கள் கூடின
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து டாக்சிகளுக்கும் தனியார் வாடகை கார்களுக்கும் தேவை அதிகரித்து இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்றும் வகையில் இந்தத் தொழில்துறை தன்னை சரிப்படுத்திக்கொண்டு சீராக விரிவடைந்து வருகிறது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.
டாக்சி, வாழ்க்கைத்தொழில் உரிமம் கேட்டு மாதாமாதம் தாக்கலாகும் புதிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 950ஆக இருக்கிறது.
இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் 650ஆக இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, டாக்சிகளும் தனியார் வாடகை கார்களும் வழங்கும் சேவைகளின் எண்ணிக்கையும் சராசரியாக 32,000 கூடி இருக்கிறது.
சென்ற ஆண்டுடன் கணக்கிட்டுப் பார்க்கையில் இது 6% அதிகமாகும்.
சிங்கப்பூர் எல்லைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. முன்பைவிட அதிக ஊழியர்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள்.
இதனால் டாக்சி, தனியார் வாடகை கார்களுக்கான தேவை கூடி இருக்கிறது என்று டாக்டர் கோர் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இப்போதைய விழா காலத்தின்போது டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களின் சேவையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் டாக்டர் கோர் வியாழக்கிழமை லக்கி பிளாசா சென்றார். அங்கு அத்தகைய வாகன ஓட்டுநர்களைச் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
"பரபரப்பான இந்த விழா கலத்தில் அவசியமான போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி நமக்கு உதவும் வாகன ஓட்டுநர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்," என்று ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் கோர் தெரிவித்து இருக்கிறார்.

