விழாக்காலத்தின்போது தாங்கள் குறைவாகவே செலவிட திட்டம் போடுவதாக மூன்றில் ஒரு பங்கு சிங்கப்பூரர்கள் ஓர் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
செலவில் மாற்றம் இன்றி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடப் போவதாக ஐவரில் ஒருவர் கூறுகிறார். 10 சிங்கப்பூரர்களில் சுமார் ஒருவர் மட்டுமே வழக்கத்தைவிட அதிகமாக செலவு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களோ, எதுவும் நிச்சயமில்லை என்றும் அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடப்போவதில்லை என்றும் கூறிவிட்டனர்.
பிரிட்டனைச் சேர்ந்த 'யூகோவ்' என்ற ஆய்வு நிறுவனம், 18 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள 1,027 சிங்கப்பூரர்களை உள்ளடக்கி டிசம்பர் 15ஆம் தேதி இணையம் வழி ஆய்வு நடத்தியது.
அதில் இந்த நிலவரங்கள் தெரியவந்துள்ளன.
எந்த அளவுக்குச் செலவிடுவீர்கள் என்று கேட்டதற்குத் தாங்கள் $101 முதல் $500 வரை செலவிடப்போவதாக மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானவர்கள் கூறினர். ஏறக்குறைய பாதிப்பேர், தாங்கள் செலவிடும் தொகை $100கூட இருக்காது என்றனர்.
இவர்களில் பாதிப்பேர் $50 வரைகூட செலவிட விரும்பவில்லை என்றனர்.
பத்தில் ஒரு பங்கினர், $501 முதல் $1,000 வரை செலவிட இருப்பதாக தெரிவித்தனர். இருபது பேரில் ஒரே ஒருவர்தான் $1,000க்கும் மேல் செலவிடப்போவதாகக் கூறினார்.
இதனிடையே, இதுபற்றி கருத்து கூறிய 'சிஐஎம்பி' வங்கி பொருளியல் வல்லுநர் சோங் செங் ஊன், வாழ்க்கைச் செலவு அதி கரித்துவிட்டதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து சீனப் பெருநாள் வருவதாலும் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று விளக்கினார்.
இந்த 2022ஆம் ஆண்டு முடிவடையப்போகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு பற்றி கருத்து கூறிய சிங்கப்பூரர்களில், 2021ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு பரவாயில்லை என்று சொன்னவர்கள் அதிகம் என்று 'இப்சோஸ்' (Ipsos) என்ற சந்தை ஆய்வு நிறுவனம் நடத்திய வேறு ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று 57% சிங்கப்பூரர்கள் தெரி வித்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு பற்றி அந்த ஆண்டில் இப்படி கூறியவர்கள் 80% என்பது குறிப்பிடத்தக்கது.
செலவு அதிகரித்துவிட்டது. உலகப் பொருளியல் நிலவரம் நிச்சயமில்லாமல் இருக்கிறது.
ஆகையால், அடுத்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும் என்று கூறமுடியவில்லை என தெரிவித்தவர்கள் அதிகமாக இருந்தனர்.
இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தோர் 64%தான்.
இந்த விகிதம் சென்ற ஆண்டில் 79% ஆக இருந்தது.
இப்சோஸ் ஆய்வு, 36 நாடு களில் சுமார் 24,000 மக்களை உள்ளடக்கி அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதிவரை நடத்தப்பட்டது.
அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இஸ்ரேல், மலேசியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனீசியா முதலான நாடுகள் அவற்றில் அடங்கும்.
அடுத்த ஆண்டில் ஊதியத்தைவிட செலவு அதிகரிக்கும் என்று தாங்கள் நம்புவதாக 10ல் ஒன்பது சிங்கப்பூரர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலக அளவில் பெரும்பெரும் பங்குச் சந்தைகள் சரியும் என்று தாங்கள் நம்புவதாகக் கூறிய சிங்கப்பூரர்கள் விகிதம் 60% ஆக இருக்கிறது.
உக்ரேன் போர் 2023ல் முடிவுக்கு வரும் என்று உலகில் சராசரியாக 40 விழுக்காட்டினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோலவே 39% சிங்கப்பூரர்களிடம் இந்த நம்பிக்கை காணப்படுகிறது.
வரும் ஆண்டில் ஏதோ ஒரு சச்சரவில் அணு ஆயுதங்கள் ஈடு படுத்தப்படும் வாய்ப்பு உண்டு என்று ஏறக்குறைய 56% சிங்கப்பூரர்கள் நினைக்கிறார்கள்.
இந்த விகிதம் முந்திய ஆண்டில் 16% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

