ஓய்வு பெற்றவரான சிம் கோ ஹுவாட் என்ற 77 வயது முதியவர், நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள புளோக் 26க்குப் பக்கத்தில் தரையில் 80,000 போத்தல் மூடிகளைக் கொண்டு கலை ஓவியப் படைப்பை உருவாக்கி இருக்கிறார்.
அன்றாடம் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை கடந்த ஜூலை முதல் இந்தப் படைப்பை அவர் வடிவமைக்கத் தொடங்கினார்.
சிங்கப்பூர் மாதிரி வரைபடத்தில் தோட்டக்கலை நுணுக்கங்கள், பூக்கள் மலர்ந்து இருப்பதைப் போல ஒரு தோட்டத்தை கலைப்படைப்பாக இவர் உருவாக்கி இருக்கிறார்.
ஈஸ்ட் கோஸ்ட் திட்டம் என்ற திட்டத்தின்கீழ் சமூகத்தை ஈடுபடுத்த ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் பல்வேறு செயல்திட்டங்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கின்றன.
அந்தச் செயல்திட்டங்களில் ஒரு பகுதியாக இந்தக் கலைப் படைப்பு இடம்பெறுகிறது. திரு சிம் பிடோக் போகைன்வில்லா குடியிருப்பாளர் குழு அனுமதியுடன் இதைச் செய்து இருக்கிறார்.
ஒரே மாதத்தில் குடியிருப்பாளர்கள் 80,000 போத்தல் மூடிகளைச் சேகரித்தனர். அவற்றை வகை வகையாக திரு சிம் பிரித்து எடுத்தார். சிமெண்ட் கலவையைக் கொண்டு போத்தல் மூடிகளைப் பொருத்தி கலைப் படைப்பை உருவாக்கினார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வியாழக்கிழமை திரு சிம்மின் கலைப் படைப்பைப் பார்த்துவிட்டு, அது தன் மனதைக் கவர்ந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

