விக்டோரியா இங் ஹுய் மின் என்ற 34 வயது மாது இப்போது ஊழியர் வளத்துறை நிபுணராக வேலை பார்க்கிறார்.
அந்த மாது 34 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் தரகர் ஒருவர் மூலமாக 8,000 ரிங்கிட் பணத்திற்கு விற்கப்பட்டார்.
அவருக்கு நான்கு மாதம் ஆனபோது அவரை அழைத்துக்கொண்டு வளர்ப்பு பெற்றோர் சிங்கப்பூர் வந்துவிட்டார்கள்.
அந்த மாதைத் தத்தெடுத்து வளர்த்து வந்த வளர்ப்பு தாய், மூன்று மாதங்களுக்கு முன் உறக்கத்திலேயே மாண்டுவிட்டார்.
அவரின் வளர்ப்பு தந்தையும் நினைவாற்றல் இழந்து தாதியர் விடுதியில் தங்கி இருக்கிறார்.
திருவாட்டி இங்கிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் படித்து வருகிறார்கள். தான் விற்கப்பட்டது பற்றி இரண்டு ஆண்டுகளுக்குமுன் 2020 அக்டோபரில் ஒரு நாள் தன்னுடைய வளர்ப்பு தாயாரிடம் இருந்து திருவாட்டி இங் தெரிந்துகொண்டார்.
தன்னைப் பெற்ற பெற்றோரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் ஐக்கியமாவதற்கு இதுவே சரியான நேரம் என்று கருதி திருவாட்டி இங், அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து இருக்கிறார்.
ஆனால், போதிய ஆதாரம் எதுவும் அவரிடம் இல்லை.
அவரின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் ஒரு சில படங்கள் மட்டும் இருக்கின்றன.
"எல்லாரையும் போலவே என் மனமும் என்னை பெற்றவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஏங்குகிறது. என்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், அவர்களும் என் பெற்றோரும் எங்கே இருக்கிறார்கள்? என்னை ஏன் விற்றார்கள்? என்பது எதுவுமே தெரியவில்லை," என்று திருவாட்டி இங் கூறுகிறார்.
திருவாட்டி இங்கை தத்தெடுத்த பெற்றோருக்குக் குழந்தைகள் எதுவும் கிடையாது. அந்தப் பெற்றோர் அன்பாக அவரை வளர்த்து வந்தனர்.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் கூட்டுரிமை அடுக்குமாடி வீடு ஒன்றில் அவர்கள் வசித்து வந்தனர். திருவாட்டி இங் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பொருளியல் துறையில் பட்டம் படித்தவர்.
அவருக்கு ஒரு வகை ரத்த குறைபாடு இருக்கிறது.
அதாவது ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்கள் முன்னதாகவே அழிந்துவிடும். இத்தகைய ஒரு குறைபாடு பெற்றெடுத்த பெற்றோரிடம் இருந்துதான் அவருக்கு வந்து இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
தன்னைப் பெற்றெடுத்தோரைச் சந்தித்து தன் உடன்பிறந்தவர்களுடன் மகிழும் காலத்தை மிக ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறார் திருவாட்டி இங்.
யாருக்காவது ஏதாவது தடயம் தெரிந்தால் அவர்கள் blessed beyondcount@gmail.com இந்த முகவரியில் திருவாட்டி இங்குடன் தொடர்புகொள்ளலாம்.

