பொன்மணி உதயகுமார்
தமது ஐந்து வயதிலிருந்து குடும்பத்தாரின் சமூகத் தொண்டு பயணத்தில் பங்கேற்றுவரும் திருவாட்டி அனுஷா அஸ்வானி, 36, இன்று 'ஏஷியன் ஃபுட் நெட்வொர்க்' நிர்வாகத்திற்குத் தலைமை தாங்கும்போதும் தொண்டு மனப்பான்மையைக் கைவிடவில்லை.
அந்நிறுவனத்தில் திருவாட்டி அனுஷா பொறுப்பேற்று சில ஆண்டுகளே ஆனபோதும், இதுவரை கிட்டத்தட்ட இரண்டு டன் அரிசியையும் 50 பெட்டி குளிர்பானங்களையும் 'வில்லிங் ஹார்ட்ஸ்' அறநிறுவனம், 'ஹெச்சிஎஸ்ஏ கம்யூனிட்டி சர்விசஸ்', ஜாமியா சிங்கப்பூர் போன்ற அமைப்புகளுக்கு அந்த நிறுவனம் நன்கொடையாக வழங்கி இருக்கிறது.
இதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமின்றி, வசதி குறைந்தவர்கள், முதியவர்கள், உடற்குறை உள்ளோர், ஒற்றைப் பெற்றோர் ஆகியோரைக் கொண்ட குடும்பங்கள் என 10,000க்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்திருக்கிறார்கள்.
தமது தொண்டூழியப் பயணத்திற்கு தம் குடும்பத்தில் உள்ள மாதர் உந்துதலாக இருந்துள்ளனர் என்று சொன்னார் திருவாட்டி அனுஷா.
நைஜீரியாவில் வளர்ந்த இவர், சிறுவயதில் தம் தாயாருடன் சென்று வசதி குறைந்தவர்களுக்கு ரொட்டி கொடுத்ததை இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்.
வார இறுதிகளிலும் தம் குடும்பத்துடன் சேர்ந்து பல சமூகத் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவர் பகிர்ந்துகொண்டார்.
அத்துடன், திருவாட்டி அனுஷா தம் குடும்பத்துடன் சேர்ந்து நைஜீரியாவில் சுகாதாரத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறார். அடிப்படை வசதிகளின்றி பெண்கள் கல்வியை நிறுத்துவதைத் தவிர்க்க உதவும் வகையில் அத்திட்டம் அமைந்திருக்கிறது. கழிவறைகள், தண்ணீர்க் குழாய் வசதிகள் போன்றவற்றைத் தம் குடும்பத்தின் அறநிறுவனம் மூலம் இவர் ஏற்படுத்தித் தந்துள்ளார்.
இன்று 86 வயதிலும் தம் பாட்டி ஓர் உதவியாளருடன் இணைந்து வாரத்தில் இரண்டு நாள்கள் தாங்களே சமைத்து, சிக்லாப் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளங்களுக்குச் சென்று வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு, பானங்களை வழங்குவதாக திருவாட்டி அனுஷா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றின்போது தம் சகோதரருடன் சேர்ந்து வலையொளி ஒன்றை இவர் தொடங்கினார். ஆசிய வட்டாரத்தில் உள்ள சமூக நிறுவனங்களின் பங்கை வெளிப்படுத்துவதற்கும் அவர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கும் 'புரோஜெக்ட் ரேரே' என்ற பெயரில் அந்த வலையொளி தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சமூகத் திட்டங்களிலும் திருவாட்டி அனுஷா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில், வீட்டிற்கு வெளியே வசதி குறைந்தவர்களுக்காக உணவுப்பொருள்களையும் மளிகைப்பொருள்களையும் சக்தி என்ற சிறுமி வைக்கத் தொடங்கியபோது, திருவாட்டி அனுஷா தம் நிறுவனத்தின் சார்பாக உணவுப்பொருள்களை நன்கொடையாக வழங்கினார். இதுபோன்று சமூகத் தொண்டு முயற்சிகள் குறித்து கேள்விப்பட்டால், அவற்றுக்குத் தம்மால் முடிந்த அளவில் கைகொடுக்க முயல்கிறார்.
பொருளியல் சரியும்போதும் அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலையில் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பதில் தம் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது என்றார் இவர்.
தமது நிறுவனம் இறக்குமதி செய்யும் பொருள்களைக் கடைத்தொகுதிகள் தக்கவிலையில் விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர், அதனைக் கடைக்காரர்களிடமும் வலியுறுத்தி வருகிறார்.
"எல்லாராலும் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவ முடியும். நேரம் செலவழிப்பதாக இருக்கட்டும் அல்லது நன்கொடை வழங்குவதாக இருக்கட்டும், நம்மால் என்ன முடியும் என்று சிந்தித்து நம் பங்கைச் சமூகத்திற்கு ஆற்றலாம்," என்கிறார் திருவாட்டி அனுஷா.

