கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை, சிங்கப்பூரில் நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு கிட்டத்தட்ட பத்து மடங்காக அதிகரித்ததாக அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவாக, காடுகளும் தாவரங்களும் கரியமிலவாயு நன்கு உறிஞ்சும் திறன் கொண்டவை. இந்நிலையில், வீடமைப்பு மற்றும் பிற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அவை அழிக்கப்படும்போது கரியமில வாயு வெளியிடப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியீட்டில் நிலத்தின் பங்களிப்பு 0.03%.
இவ்விகிதம் 2018ஆம் ஆண்டில் 0.21 விழுக்காடாக அதிகரித்தது.
அதேபோல, நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் 2016ஆம் ஆண்டில் 11.95 டன் கரிமம் வெளியிடப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டில் அது 106.36 டன்னாக உயர்ந்தது.
புவி வெப்பமடைவதற்கும் அதன்மூலம் பருவநிலை மாற்றத்திற்கும் முக்கியக் காரணமாக விளங்குவது கரியமில வாயுதான். அதுவே, சிங்கப்பூரின் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டில் பெரும்பங்கு வகிக்கின்றது.
மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை தீங்கு விளைவிக்கும் மற்ற வாயுக்கள்.
கடந்த 2016-2018 காலகட்டத்தில், சில காட்டுப்பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளாகப் மாற்றப்பட்டன என்றும் ஆயினும் சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்படும் இயற்கை வனப்பகுதிகள் எதுவும் அழிக்கப்படவில்லை என்றும் தேசிய பூங்காக் கழகத்தின் அனைத்துலகப் பல்லுயிர்ப் பாதுகாப்பு மூத்த இயக்குநர் லீனா சான் கூறினார்.
புக்கிட் தீமா, மத்திய நீர்ப்பிடிப்பு, சுங்கை பூலோ சதுப்பு நிலப்பகுதி, லேப்ரடார் ஆகியவை சிங்கப்பூரால் பாதுகாக்கப்படும் நான்கு இயற்கை வனப்பகுதிகள்.
சிங்கப்பூரின் நிலப் பயன்பாட்டால் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் குறித்த விவரம் சிங்கப்பூரின் ஐந்தாவது ஈராண்டுப் புதுப்பிக்கப்பட்ட பதிவு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதே சிங்கப்பூரில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிட்டீற்கு முக்கியக் காரணம். 2018ல் சிங்கப்பூரின் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டில் அதன் பங்கு 93.5%.
வரும் ஆண்டுகளில் தாவரங்கள்மூலம் கரிமச் சேமிப்பை அதிகப்படுத்த தேசிய பூங்காகக் கழகம் திட்டமிட்டுள்ளது. தனது பசுமைமயமாக்கும் நடவடிக்கைகள் நீடித்து நிலைக்கும் வகையில் இருக்க அது சமூகத்துடன் தொடர்ந்து பணியாற்றும் என்று டாக்டர் சான் சொன்னார்.
கடந்த 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட 'ஒரு மில்லியன் மரங்கள்' இயக்கத்தின்மூலம் வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் மரங்களை நட சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. அவ்வியக்கத்தின்கீழ் இதுவரை 460,000 மரங்கள் நடப்பட்டுவிட்டன.

