தண்டனை கடுமையாக்கப்பட்டு இருக்கிறது என்றாலும் முன்பைவிட அதிக இளைஞர்கள் இணைய வர்த்தக மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அத்தகைய மோசடிகளில் பெரும்பாலானவற்றில் சிக்கிவிட்ட அப்பாவிகள், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் $8.3 மில்லியனை இழந்துவிட்டனர்.
மோசடிக்காரர்கள் பல்வேறு பொருள்களை விற்பவர்கள் போல விளம்பரப்படுத்தி பணத்தை வாங்கிக்கொண்டு பொருள்களைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல் தொடர்பில் கைதானவர்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் 29 வயதும் அதற்குக் குறைந்த வயதும் உள்ளவர்கள் என்பது காவல்துறை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
அந்தக் காலகட்டத்தில் மொத்ததம் 121 பேர் கைதாயினர். அவர்களில் 19 வயதும் அதற்கும் குறைந்த வயதுள்ள 15 இளையர்களும் அடங்குவர். 56 பேருக்கு வயது 20 முதல் 29 வரை.
ஏமாற்றும் நோக்கத்தில் இணையத்தில் சில பொருள்களை விளம்பரப்படுத்தினால் அது ஓர் ஏமாற்றுச் செயலாகவே கருதப்படும் என்று விதர்ஸ் கத்தார்வோங் சட்ட நிறுவனத்தின் மூத்த இணை வழக்கறிஞர் ஜெரமி பெரேரா தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.
சிங்கப்பூரில் இடம்பெறும் மோசடிகளில் வேலை தொடர்பான மோசடிகள் ஆக அதிகம். போலியான பெயரில் பலரையும் ஏமாற்றுவது அடுத்த இடத்தில் உள்ளது.
இணைய வர்த்தக மோசடிகள் 3வது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மெத்தம் 2,267 இணைய வர்த்தக மோசடிகள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 1,057 ஆக இருந்தது என்பது ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட காவல்துறை புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
இணைய வர்த்தக மோசடிகள் அதிகரித்ததால் சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை கூடிவிட்டது.
கெரோசல், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட இணையத்தளங்களையே மோசடிக்காரர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
மின்னணுப் பொருள்கள், சேகரித்து வைக்கக்கூடிய நினைவுப் பொருள்கள் உள்ளிட்ட பலவும்தான் அதிகமாக விற்பனைக்குக் கொடுக்கப்பட்டு ஏமாற்றப்படுகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 வயது ஆடவர் ஒருவருக்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 16 குற்றங்களை ஒப்புக்கொண்டார். 40க்கும் மேற்பட்ட அப்பாவிகளை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் $38,000ஐ அந்த நபர் பறித்துவிட்டார்.

