சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரண்டாண்டு கொவிட்-19க்குப் பிறகு இந்த ஆண்டு மக்கள் நேரடியாகக் கலந்து கொள்ளும் வகையில் முழு மூச்சாக இடம்பெறவிருக்கின்றன.
முயல் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி பிறக்கிறது. அதை வரவேற்று கொண்டாட ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.
கிரேத்தா ஆயர் சதுக்கத்தில் ஜனவரி 3ஆம் தேதி அதிகாரபூர்வ வீதி ஒளிவிளக்கு ஏற்றும் விழா நடக்கும். பல்வேறு சாலைகளிலும் ஒளி விளக்குகள் பிப்ரவரி 19ஆம் தேதி வரை இரவில் ஒளிரும்.
கிரேத்தா ஆயர் சதுக்கத்தில் ஜனவரி 21 இரவு 9 மணி முதல் பின்னிரவு 1 மணி வரை மேடைக் கலை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும்.
ஜனவரி 1 முதல் ஜனவரி 21 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சைனா டவுன் விழாச் சந்தை பல வீதிகளிலும் நடக்கும்.
முதல்தடவையாக ஸ்மித் ஸ்திரீட்டில் சைனா டவுன் உணவுச் சந்தை இடம்பெறும்.
ஜனவரி 7ஆம் தேதி விழாக்கால கருப்பொருளைக் கொண்ட வாரயிறுதி பயிலரங்குகள் நடக்கும். இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 3, 4ஆம் தேதிகளில் சிங்கே அணிவகுப்பு ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
எண் 1 ஸ்ட்ரெய்ட்ஸ் பொலிவார்ட் முகவரியில் உள்ள சிங்கப்பூர் சீன கலாசார நிலையத்தில் கலைப் படைப்பு கண்காட்சி மார்ச் 31ஆம் தேதி வரை அன்றாடம் நடக்கும்.
குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் லேசர் ஒளி, ஒலி நிகழ்ச்சி நடக்கும். சிங்கப்பூர் சீன கலாசார நிலையம் சீனப் புத்தாண்டு இணைய வழிகாட்டி ஒன்றை https://festivefever.singaporeccc.org.sg/chinese-new-year/ முகவரியில் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கும்.
கரையோரப் பூந்தோட்டங்களில் ஜனவரி 20 முதல் 28 வரை ஆற்று ஹொங்பாவ் கேளிக்கை நிகழ்ச்சி நடக்கும். ஜனவரி 13 முதல் 26 வரை ஃபிளவர் டூமில் மிதவை காட்சி நடக்கும்.
சன் யாட் சென் நன்யாங் நினைவு மண்டபத்தில் வாங் சிங் இளவேனிற் திருவிழா தொடங்கும். இது டிசம்பர் 29 முதல் பிப்ரவரி 19 வரை திறந்திருக்கும்.
சிங்க நடனம், இசைப் பயிலரங்குகள், சிறாருக்கான கதை சொல்லும், கைவினை நிகழ்ச்சிகளில் வருகையாளர்கள் பதிந்துகொள்ளலாம்.
இந்த நினைவு மண்டபம் முதன் முறையாக சிறப்பு கோயில் சுற்றுலாவை நடத்தும். தேசிய மரபுடைமைக் கழகம், சந்திரப் புத்தாண்டு அருங்காட்சியக வட்டமேசை ஹொங்பாவ் இயக்கத்தை ஜனவரி 6 முதல் பிப்ரவரி 3 வரை நடத்தும்.
சீனப் புத்தாண்டையொட்டி சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் நிரந்தர கலைக் கூடங்களுக்கான நுழைவு பிப்ரவரி 4 ஆம் தேதியன்று இலவசமாக இருக்கும்.
கோயில் சுற்றுலா போன்ற புத்தாக்க அம்சங்கள், இதர கவர்ச்சிகள் காரணமாக அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தேசிய மரபுடைமைக் கழகத்தின் துணைத் தலைமை நிர்வாகி ஆல்வின் டான் கூறினார்.

