மின்தூக்கிக்குள் இருந்தபோது தமது மாற்றியமைக்கப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பற்றியதை அடுத்து, 20 வயது இளையர் ஒருவர் அதிகமான தீக்காயங்களாலும் புகையை உள்ளிழுத்ததாலும் இறந்தார்.
முகமது இர்ஃபான் டேனிஷ் அஸாரின் மரணம் குறித்த விசாரணை நேற்று முதல் நாளாக நடைபெற்றது. அதில் சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி, அந்தத் தனிநபர் நடமாட்டச் சாதனம் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை என்று கூறினார்.
திரு இர்ஃபான் 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அந்தச் சாதனத்தை கெரோசெல் இணைய விற்பனைத் தளத்திலிருந்து வாங்கினார். அவர் அதை வாங்கியபோதே சாதனம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது என்று உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவின் ஆய்வாளர் சோஃபியான் அஸாமி கூறினார். "சாதனத்தில் மின்சாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்கலத்தைப் பொருத்தி, அவர் அதை மேலும் மாற்றினார்," என்றார் திரு சோஃபியான்.
மின்சாரமே தீ மூண்டதற்கு மூல காரணம் என்றும் அது தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் தொடங்கியது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மூத்த தீச்சம்பவ விசாரணை அதிகாரி முகமது ஃபைசல் மஸ்லான் குறிப்பிட்டார். ஒரு மின்கலம் அளவுக்கு அதிகமாக வெப்பம் அடைவதையும் மின்னேற்றம் நிகழ்வதையும் தடுக்கும் மின்கல நிர்வாக முறை அதில் இல்லை என்றார் அவர்.
கடந்த 2021 ஜூன் 3ஆம் தேதி உட்லண்ட்ஸ் டிரைவ் 16 புளோக் 537ல் இரவு 11.25 மணிக்கு மேல் சம்பவம் நடந்தது. திரு இர்ஃபான் மின்தூக்கிக்குள் தனியாக இருந்தபோது தீ மூண்டது. பலத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, அவர் மறுநாள் கூ டெக் புவாட் மருத்துவமனையில் காலமானார்.

